Tuesday, May 28, 2013

யாதொன்றும் யாமறியேன்!



“எனக்கு தெரியாமல் அரசு அதிகாரிகள் அவர்களாகவே முடிவெடுத்து அறிவித்துவிட்டார்கள்” இன்றைக்கும் மற்றுமொரு முறை இப்படி அப்பாவியாக சொல்லி இருக்கிறார் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு புரட்சி தலைவி பொன்மனசெல்வி காவிரி தந்த கலைச்செல்வி அம்மா ஜெ.ஜெயலலிதா அவர்கள். தமிழக வரலாற்றின் மிக சிறந்த நிர்வாகி என பெயரெடுத்தவர்.

விஷயம் வேறொன்றும் இல்லை. சமீபத்தில் தமிழக அரசு ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. அதன்படி, தமிழக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் (‘மற்றும்’ என்கிற சொல் பயன்படுத்தக்கூடாது. “கலையும் அறிவியலும்”-னு தான் சொல்லவேண்டும் எனும் குதர்க்கம் பேசும் தமிழுணர்வு தோழர்கள் மன்னிப்பார்களாக!) உட்தேர்வுகள் (இண்டர்னல் எக்ஸாம்ஸ்) இனிமேல் ஆங்கில மொழியில் தான் எழுதவேண்டும். மாணவர்களுக்கு ஆங்கில அறிவை மேம்படுத்தும் நோக்கில் இப்படி ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டதாக சொல்லப்பட்டது.

இந்த அறிவிப்புக்கு பல முனைகளிலிருந்தும் பலத்த எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, இன்றைக்கு மாண்புமிகு முதல்வர் அவர்கள், அப்படி ஒரு அறிவிப்பு வந்ததே தனக்கு தெரியாது எனவும், தனக்கு தெரியாமல் அரசு அதிகாரிகளே அப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டதாகவும் சொல்லி, அந்த உத்தரவை ரத்து செய்திருக்கிறார்.


இப்படி அவர் சொல்லுவது இது முதல் முறை அல்ல. மிக மிக நீளமான பட்டியலே இருக்கிறது. அவற்றுள் சில உங்கள் மறு நினைவுறுத்தலுக்காக.

டான்சி நில விற்பனை விவகாரத்தில் ஆவணங்களில் இருந்தது தனது கையெழுத்தே அல்ல என சொல்லி, உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தபின் தனது கையெழுத்து தான் என ஒப்புக்கொண்டார்.

2006 சட்டமன்ற தேர்தலில் நான்கு தொகுதிகளில் போட்டியிட்டு, அப்படி போட்டியிட்ட நான்கு தொகுதி வேட்புமனு பட்டியலிலும் ‘நான் இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட விண்ணப்பிக்கவில்லை’ என அத்தாட்சி அளித்திருந்தார். தேர்தல் விதிமுறை படி, இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிடக்கூடாது என்பதால் அந்த வழக்கு இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

2011 சட்டமன்ற தேர்தல் சமயத்தில் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும் போழுதே வேட்பாளர் பட்டியல் வெளியானது. வாத பிரதிவாதங்கள் வலுக்கவே வேட்பாளர் பட்டியல் தனக்கு தெரியாமலேயே வெளியிடப்பட்டுவிட்டதாக சொல்லி பட்டியலை ரத்து செய்தார்.

அண்ணா பவழவிழா வளைவு அகற்றப்பட்டபோதும், பலத்த எதிர்ப்பு வந்ததும் தனக்கு தெரியாமலேயே அந்த வளைவு இடிக்கப்பட்டதாக சொல்லி, மீண்டும் அதை அதே இடத்தில் மறு நிர்மாணம் செய்தார்.

தமிழகத்தில் கடுமையான மின் வெட்டு நிலவுவதை எதிர்த்து தமிழகம் முழுதும் பொதுமக்கள் பரவலாக சாலையில் இறங்கி மறியல் செய்தவுடன், தமிழகத்தில் இப்படி ஒரு மின்வெட்டு நிலவுவதை அமைச்சர்கள் என் கவனத்துக்கு கொண்டுவரவேயில்லை. எனக்கு இந்த விஷயமே தெரியாது என சொல்லி கைதட்டல் வாங்கிக்கொண்டார்.

சமீபத்தில் கூட, கட்சியிலும், ஆட்சியிலும் தனக்கு தெரியாமலேயே சிலர் பல்வேறு நிர்வாக முடிவுகளை எடுத்து வருவதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார். பின்னர் அப்படி தான் பேசவில்லை என்றொரு சிறிய அறிக்கையும் வெளியானது.

அண்ணா நூலக கட்டிடம் திருமணவரவேற்புக்கு வாடகைக்குவிட்டது, ராணிமேரி கல்லூரி தலைமை செயலகமாக மாற்றப்பட முயற்சித்தது, கண்ணகி சிலை அகற்றப்பட்டது என முதல்வருக்கு தெரியாமலேயே நடைபெற்ற நிகழ்வுகள் பல பல.

ஒரு விஷயத்துக்காக அவரை பாராட்டவேண்டும்.

இப்படி எல்லாம் சொல்லி அந்த நேரத்தில் விவகாரத்தை சரிக்கட்டிவிட்டாலும், இது வரை எந்த அதிகாரியையும், அமைச்சரையும் இந்த காரணத்துக்காக அவர் நடவடிக்கை எடுத்ததில்லை. ‘பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்? எதுவும் தவறல்லவே’ என்பதை முதல்வர் நன்றாக உணர்ந்து நடுநிலையோடு நடந்துகொண்டிருக்கிறார்.

இவ்வளவு கடுமையான மின்வெட்டு நிலவுவதை தன்னிடம் மறைத்து, தன்னை ஆருயிர் அன்பு சகோதரியாக கொண்டாடும் தமிழக மக்களை வாட்டி வதைத்த மின் துறை அமைச்சர் மீதே அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதில் இருந்தே அவரது தாயுள்ளத்தை நாம் புரிந்துகொள்ள முடியும்.

எனக்கு மிக நெருங்கிய ஒரு அரசு அதிகாரி முன்பு ஒருமுறை என்னிடத்தில் சொன்னார். தமிழகத்தில் ஜெ. தலைமையிலான அதிமுக அரசு அமைந்தால் உடனடியாக அமலுக்கு வரும் ஒரே கொள்கை “அதிகாரிகளின் சாதனைகள் என்பது அரசின் சாதனையாக பார்க்கப்படும்; ஆனால் அரசின் தவறுகள் எல்லாம் அதிகாரிகளின் தவறுகளாகவே சித்தரிக்கப்படும்” ஆறுதல் என்னவென்றால், அப்படி சித்தரிக்கப்பட்ட தவறுகளை செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எதுவும் இருக்காது.

எது எப்படியோ, தமிழகத்தின் மிக சிறந்த நிர்வாகி என புகழப்பட்ட ஜெயலலிதா அவர்களின் நிர்வாக பல்டிகள் மக்களுக்கும் மீடியாவுக்கும் பழகிப்போய்விட்டன. அதனால் தான் ஒவ்வொரு முறை அவர் தவறு செய்யும்போதும், அந்த தவறை மற்றவர்கள் மீது தூக்கி எறியும்போதும் யாரும் பெரிதாக எந்த உணர்வும் வெளிப்படுத்துவதில்லை.

அப்படியான ஒரு நிகழ்வாகவே இன்றைய நிகழ்வும் அமையும், இனியும் அமையும் என எதிர்பார்ப்போமாக. ஒரு வழிப்போக்கன் போல காட்சிமாற்றங்களை கண்டு ரசிக்கும் நமக்கு இவை ஒரு நல்ல கேளிக்கை என்பதை தவிர குறிப்பிடத்தக்க எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

2 comments:

  1. Nalla katturai.

    ReplyDelete
  2. தங்க தாரகை, ஈழத்தாய், டாக்டர் விட்டுப்போச்சி

    ReplyDelete