Sunday, November 23, 2025

கோவை மெட்ரோ திட்டம்

கோவை & மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியது தான் சமீபத்திய பரபரப்பு.

தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கோயம்புத்தூர் (கோவை) தனது தொழில் வளர்ச்சி வேகத்தால் தென்னிந்தியாவின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்றாக மாறி வருகிறது.

IT நிறுவனங்கள் தொழிற்சாலைகள் நிறைந்த நகரமான கோவை நாளுக்கு நாள் விரிவடைந்து வருகிறது.



எதிர்கால தேவைக்கான போக்குவரத்து வசதிகளை தொலைநோக்கோடு ஆரம்பிக்கும் விதமாக டாக்டர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது (2006-11) திட்டம் தீட்டப்பட்டு கோவை நகருக்கான வளர்ச்சியை கருதி மெட்ரோ சேவைக்கான முதல் கட்ட கணக்கெடுப்பும் திட்ட வரையறையும் செய்யப்பட்டது.

ஆனால் 2011 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் ஆட்சிக்கு வந்த அதிமுக முதல்வர் ஜெயலலிதா அவர்கள், கோவைக்கு மெட்ரோ திட்டம் தேவை இல்லை என அந்த திட்ட பணிகளை கிடப்பில் போட்டார்கள். மெட்ரோவுக்கு பதிலாக மோனோ ரயில் திட்டத்தை கோவைக்கு கொண்டு வருவோம் என அதிமுக சொன்னது. ஆனால் அதற்கும் எந்த ஆக்கப்பூர்வமான பணிகளையும் அதிமுக எடுக்கவில்லை.

2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆட்சிக்கு வந்த எடப்பாடி பழனிசாமி அவர்களது ஆட்சியில் (2017–2021) கோவை மெட்ரோ திட்டம் மீண்டும் கையிலெடுக்கப்பட்டு அதற்கான  feasibility studies  மேற்கொள்ளப்பட்டன.

2021 தேர்தலில் திமுக வென்று ஆட்சி அமைத்தபிறகு தான் கோவைக்கான விடிவுகாலம் பிறந்தது. 

கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டு இருந்த கோவை மெட்ரோ திட்டத்தை மீண்டும் உத்வேகம் பெறவைத்தது திமுக . CMRL (Chennai Metro Rail Ltd) மூலமாக திட்ட அறிக்கை DPR தயாரிப்பு செயல்முறைகள் வேகமெடுத்து 2023இல் DPR மாநில அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. 

2024 ஆம் ஆண்டு Phase-1 DPR மற்றும் CMP சமர்ப்பிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.

அப்படி அனுப்பப்பட்ட திட்டம் தான் இப்போது மத்திய அரசால் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளது.

திட்டத்தை திருப்பி அனுப்பியதற்கு மத்திய அரசு சொன்ன முக்கியமான காரணங்கள்:

🔹2011 ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி கோவை நகரின் மக்கள் தொகை 15 லட்சம் தான். குறைந்தது 20 லட்சம் மக்கள் தொகை உள்ள நகரங்களுக்கு மட்டுமே மெட்ரோ திட்டம் அனுமதி அளிக்கப்படும்

🔹கோவை மெட்ரோவில் 5-6 லட்சம் பேர் பயணிப்பார்கள் என கணக்கிடப்பட்டு உள்ளது. சென்னை நகரிலேயே மெட்ரோ ரயிலில் இப்போது 4 லட்சம் பேர் தான் பயணிக்கிறார்கள் என்கிற நிலையில் கோவையில் 5 முதல் 6 லட்சம் பேர் வரை பயணிப்பார்கள் என சொல்லி இருப்பது அதிகமாக தோன்றுகிறது.

🔹கோவை மெட்ரோ திட்ட அறிக்கையில் ரயில் 34 கிமீ வேகத்தில் பயணிக்கும் என சொல்லப்பட்டு உள்ளது. இந்த வேகத்தில் செல்வதற்கு ஆட்டோ ரிக்ஷா போதும். 

🔹கோவை நகருக்கு மெட்ரோ திட்டம் தேவை இல்லை. அதற்கு பதிலாக BRTS போன்ற பேருந்து திட்டங்களை செய்தால் போதும்

இப்படியான காரணங்களை குறிப்பிட்டு கோவை நகருக்கான மெட்ரோ திட்டத்தை மத்திய அரசு திருப்பி அனுப்பி இருக்கிறது.

மத்திய அரசு சொன்ன காரணங்கள் நியாயமானவை தானா? என்பது தான் கடந்த சில நாட்களாக நடந்து வரும் விவாதத்தின் முக்கிய காரணி. அது நியாயமான காரணங்கள் தானா என்பதை பார்ப்போம்.

மக்கள் தொகை போதுமானதாக இல்லை:

2011 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் DPR தயாரிக்கப்பட்டு உள்ளது. அப்போது கோவை நகரின் மக்கள் தொகை சுமார் 15 லட்சம். 14 ஆண்டுகள் கழித்து இப்போது கோவையின் மக்கள் தொகை சுமார் 32 லட்சம். ஆனால் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை வெறும் 15 லட்சம் தான் இருந்தது என்பதால் மெட்ரோ ரயில் திட்டம் அனுமதிக்க முடியாது என மத்திய அரசு சொல்லி இருக்கிறது.

இப்போது அனுமதி கொடுத்தாலும் மெட்ரோ செயல்பாட்டுக்கு வர சுமார் ஐந்து வருடங்கள் ஆகலாம். அப்போதைய தேவையை கருத்தில் கொண்டு தான் DPR தயாரிக்கப்பட்டு உள்ளது.

இப்போதே சுமார் 30 லட்சம் மக்கள் தொகை கோவையில் உள்ளது. IT நிறுவனங்கள் புதிய தொழிற்சாலைகள், Multi Model Logistics Park (MMLP), Defense Industrial Corridor என பல தொழிற்சாலைகள் கோவைக்கு இன்னும் சில ஆண்டுகளில் வரவுள்ளன.

கல்லூரிகள், தொழிற்சாலைகள் ஆகிய நிறுவனங்களுக்கு வரும் மக்கள், நீலகிரி வால்பாறை போன்ற சுற்றுலா தலங்கள், கோவில்கள் ஆகியவற்றுக்கு வரும் பயணிகள் எண்ணிக்கையும் அதிகம்.

மெட்ரோ ரயிலை கோவையில் வசிக்கும் மக்கள் மட்டுமே பயன்படுத்துவார்கள் என்கிற வாதம் சரியானது அல்ல. கோவைக்கு வேளை விஷயமாகவும் வேறு காரணங்களுக்காகவும் வந்து செல்லும் மக்களும் தினசரி உபயோகிப்பார்கள்.

கோவை விமான நிலையம் 2025 ஏப்ரல் - செப்டம்பர் மாதத்தில் மட்டுமே 17 லட்சம் பயணிகளை கையாண்டு உள்ளது. அவர்களுக்கும் கோவை நகரத்துக்குள் வர மெட்ரோ தான் உதவும்.

எனவே 2011 ஆம் ஆண்டு (14 வருஷத்துக்கு முன்னர்) கோவையில் மக்கள் தொகை குறைவாக இருந்ததை காரணம் காட்டி 2023 இல் வரவேண்டிய மெட்ரோ திட்டத்தை திருப்பி அனுப்புவது எல்லாம் நியாயமே இல்லாத செயல்.

சென்னையை விட கூடுதல் பயணிகள்?

சென்னையை விட கோவையில் அதிக பயணிகள் பயணிப்பார்கள் என DPR சொல்லி இருக்கிறது. அது ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல. சென்னை மெட்ரோவில் நான்கு லட்சம் பேர் தான் பயணிக்கிறார்கள். ஆனால் சென்னை மெட்ரோவை விட குறைவான தூரம் பயணிக்கும் கோவை மெட்ரோவில் எப்படி 5 லட்சம் பேர் பயணிப்பார்கள் என மத்திய அரசு கேள்வி கேட்டு உள்ளது.

சென்னையில் புறநகர் ரயில் சேவைகள், MRTS ரயில் சேவைகள் எல்லாம் உள்ளது. அதிலெல்லாம் பெரும்பாலான மக்கள் பயணிக்கிறார்கள். அது போக மற்றவர்கள் தான் மெட்ரோவை பயன் படுத்துகிறார்கள்.

கோவையின் நிலை அப்படி அல்ல. கோவையில் புறநகர் ரயில் சேவை இல்லை. இப்போது விமான நிலையம் செல்ல பேருந்து அல்லது கார் தான் பயன்படுத்த முடியும். மெட்ரோ வேண்டும் எல்லோரும் அதை தான் பயன்படுத்துவார்கள்.



கோவை மெட்ரோ பாதையே கல்லூரிகள், IT நிறுவனங்கள், விமான நிலையம் ஆகியவற்றை மத்திய நகரத்துக்கு இணைக்கின்ற வகையில் அமைக்கப்படுகிறது. அதனால் மெட்ரோ வந்துவிட்டால் பெரும்பாலான மக்கள் மெட்ரோவை தான் பயன்படுத்துவார்கள்.

இதை எல்லாம் ஆலோசித்து தான் தெளிவான விரிவான திட்ட அறிக்கையை கொடுத்து இருக்கிறார்கள்.

ஆனால் நியாயமான காரணங்கள் எதுவும் இல்லாமல் அந்த திட்டங்களை திருப்பி அனுப்பியதோடு, கோவை & மதுரைக்கு மெட்ரோ தேவை இல்லை. அதற்கு பதிலாக BRTS வசதியை பயன்படுத்தலாமே என போகிற போக்கில் ஒரு ஆலோசனையையும் வழங்கி இருக்கிறது மத்திய அரசு.

கோவை மதுரையை விட குறைவான மக்கள் தொகையை கொண்ட பல நகரங்களுக்கு மெட்ரோ திட்டங்களை அனுமதித்த மத்திய அரசு கோவை & மதுரைக்கு மட்டும் திட்டத்தை தகுந்த காரணங்கள் இல்லாமல் திருப்பி அனுப்பி இருப்பது தமிழ்நாட்டின் அபரிமிதமான வளர்ச்சியை மட்டும்படுத்தும் செயல் போல தோன்றுகிறது.

தமிழ்நாட்டிலேயே இருக்கும் கோவையிலேயே வசிக்கும் பலரும் கூட அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசின் மறுப்பை நியாயப்படுத்தும் விதமாக கோவைக்கு மெட்ரோ தேவை இல்லை என சொல்ல தொடங்கி இருப்பதும் வருத்தமானது.

தமிழ்நாட்டின் வளர்ச்சியை பற்றி சிந்திக்கும் திமுக அரசு தொலைநோக்கு பார்வையில் அடுத்த ஐந்து காண்டுகளுக்கு பிறகான தேவையை கருத்தில் கொண்டு கோவை நகரை மேம்படுத்த எடுக்கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை நாம் ஆதரித்து செயல்பாட்டுக்கு கொண்டு வருவது தான் கோவை நகரம் வளர்ச்சி பெற உதவும்.

அரசியல் வேறுபாடுகளை கடந்து கோவைக்கான திட்டங்களை எல்லோரும் ஆதரிக்க வேண்டும், அவற்றை முடக்கும் செயல்களுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்பது தான் இப்போதைய தேவை



Saturday, July 19, 2025

தமிழ்நாடு அரசியல் ஏன் வித்தியாசமானது?

தேர்தல் அரசியலில் தமிழ்நாடு எப்போதும் ஏன் வேறுபட்டதாகவே உள்ளது?

*****

நமக்கு ஒரு சிறந்த தலைவராக, மாபெரும் தலைவராக பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் கிடைத்தார். அவர் தமிழ்நாட்டு மக்களுக்கு சமூக நீதி மற்றும் அரசியல் விழிப்புணர்வு குறித்து அவரது தொடர்ச்சியான எழுத்துக்களாலும், பேச்சுக்களாலும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தமிழ்நாட்டு மக்கள் இயல்பாகவே மிகுந்த மத நம்பிக்கை கொண்டவர்கள், ஆனால் அவர்கள் ஒருபோதும் தேர்தலில் மதத்தை கலக்க மாட்டார்கள். மத வழிபாடு கடவுள் நம்பிக்கை எல்லாம் தனிப்பட்ட விஷயங்கள் என்பதை தெளிவாக அறிந்தவர்கள்.

உதாரணமாக, அனைத்து மத விழாக்களும் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான மக்களால் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும். ஆனால் தேர்தல்களுக்கு வரும்போது, அவர்கள் தங்களது, தங்கள் பிள்ளைகளது, எதிர்காலத்தை அடிப்படையாகக் கொண்டுதான் ஒவ்வொரு முறையும் முடிவெடுக்கிறார்கள்.

தமிழ்நாட்டு மக்கள் எல்லா வித கட்சிக் கூட்டத்திற்கும் சென்று அவர்கள் பேசுவதைக் கேட்கிறார்கள். ஓவ்வொரு கட்சியும் என்ன சொல்கிறது என கேட்பதில் ஆர்வம் காட்டுவார்கள். அதற்காக அவர்கள் அந்த கட்சியின் ஆதரவாளர்கள் என்று அர்த்தம் ஆகி விடாது. 

நிறை குறைகளை ஆராய்ந்து முடிவெடுக்க எல்லா கட்சிகளின் கருத்தையும் கேட்கும் வழக்கம் தமிழ் நாட்டில் வெகு காலமாகவே உள்ளது. அதனாலேயே எல்லா கட்சி தலைவர்களின் பேச்சுக்கும் அதீதமான கூட்டம் கூடும். 

ஆனால் தேர்தல் பூத் சென்றதும் தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் மற்றும் மக்களின் எதிர்காலத்தின் அடிப்படையில் தான் வாக்குச் சாவடியில் முடிவு செய்கிறார்கள்.

உதாரணமாக, பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அவர்களால் தனது கூட்டங்களுக்கு பெரும் கூட்டத்தை ஈர்க்க முடிந்தது, ஆனால் அவரால் ஒரு MLA யாக வெல்ல முடியவில்லை, அதுவும் அவரது சொந்தத் தொகுதியில் கூட வெல்ல முடியவில்லை.

அதேபோல நாதக தலைவர் சீமான் அண்ணாமலையை விட அதிகமான மக்கள் கூட்டத்தை தான் பேச்சால் ஈர்க்கும் ஒரு சிறந்த பேச்சாளர், மேலும் பத்து வருடங்களுக்கும் மேலாக ஒரு கட்சியை வெற்றிகரமாக நடத்துகிறார். ஆனாலும் இன்னும் அவரால் ஒரு தொகுதியையும் வெல்ல முடியவில்லை.

தமிழ்நாட்டில் பேச்சை கேட்கும் கூட்டம் என்பது வாக்குகளையோ அல்லது புகழையோ தீர்மானிப்பதில்லை. என் பேச்சுக்கு கூடிய கூட்டம் வாக்கு அளித்து இருந்தால் கூட நான் MLA ஆகி இருப்பேனே என்பது பல காலமாக பலர் வழக்கமாக சொல்லும் விஷயம் தான்.

எனவே கூட்டத்தை வைத்து எல்லாம் ஆதரவை கணிப்பது என்பது காமெடியாக தான் அமையும். தமிழ்நாடு அரசியல் குறித்த புரிதல் இல்லாதவர்கள் தான் அப்படியான கணிப்புகளை சொல்வார்கள்.

தமிழ்நாட்டு மக்கள் அரசியல் விளையாட்டுகள், சில ஆண்டுகளாக பரவி வரும் அரசியல் பொய் பிரச்சாரங்கள், மத துவேஷங்கள் பற்றி எல்லாம் நன்கு புரிந்து கொண்டுள்ளனர், மேலும் அவர்கள் அத்தகைய பிரச்சாரங்களுக்கு ஒருபோதும் அடிபணிவதில்லை

தமிழ்நாடு வாக்காளர்களின் உளவியலைப் புரிந்துகொள்வதும், தமிழக மக்களின் அரசியல் விழிப்புணர்வைப் புரிந்துகொள்வதும் தமிழ்நாட்டிற்கு வெளியே இருந்து வரும் "நிபுணர்களுக்கு" எப்போதும் ஒரு எட்டாத பகுதியாகும்.

கற்பனையான கருத்தாக்கத்தை உருவாக்கும் எந்தவொரு முயற்சியும் கடைசியில் தோல்வியடையும். காரணம் தமிழ்நாட்டு மக்களிடம் நிலவும் அரசியல் தெளிவு தான்.

இங்கே மத நல்லிணக்கத்தை குலைப்பதோ, மத ரீதியாக தேர்தலை மாற்றுவதோ, மாநில மக்களுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட கட்சிகள் வெற்றி பெறுவதோ.. ஒருபோதும் நடக்காது.

தமிழ்நாட்டுக்கு வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு தமிழ்நாட்டின் அரசியல் களம் ஒருபோதும் பிடிபடாது.

நம் அனைவரையும் அரசியல் ரீதியாக விழிப்புணர்வு பெற்ற சமூகமாக மாற்றிய அண்ணாவுக்கு நன்றி 🙏🙏🙏

அவர் எப்போதோ சொன்னது போல், தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த அரசியல் தெளிவு இருக்கும் வரை, இந்த தமிழ்நாடு எப்போதும் அண்ணாதுரையால் ஆளப்படும் மாநிலமாக தான் இருக்கும் 💪💪

அண்ணாவின்
மரபு என்றென்றும் தொடரும் 🔥🔥

Sunday, June 8, 2025

கொடிக்கம்பங்கள் சொல்லும் செய்தி



நீங்க ஹைவே பயணங்களில் அங்கங்கே வரும் சின்ன சின்ன ஊர்களில்/கிராமங்களில் நுழைவு சாலைகளில் பல கட்சி கொடிகள் இருப்பதை பார்த்து இருப்பீர்கள். அதை பற்றி எப்போதாவது யோசித்தது உண்டா?

ஏன் இத்தனை கொடி கம்பங்கள்? அது ஏன் சில இடங்களில் சில கட்சி கொடிகள் இல்லை? அது ஏன் சில கட்சி கொடி உயரம் அதிகமாக இருக்கு? இப்படி ஏதாவது கேள்வி உங்களுக்குள் எழுந்து இருக்கா?

அதற்கான விடை தெரியணும் என்றால் தமிழ்நாட்டில் காலகாலமாக பின்பற்றப்பட்டு வரும் அரசியல் வழக்கங்கள் பற்றி அறிய வேண்டும்.

ஒரு ஊரில் எந்த கட்சிகள் செல்வாக்காக இருக்கிறதோ அவர்களின் கொடிகள் ஊர் எல்லையில் நடப்பட்டு இருக்கும். 

அதே ஊரில் பிற கட்சிகளின் ஆதரவாளர்களும் இருக்க கூடும். ஆனால் "கொடி வைக்கும் அளவுக்கு" அங்கே ஆள்பலம் இல்லை என அறியலாம்.

அந்த பகுதியில் செல்வாக்கு இல்லாத கட்சிகள் அந்தந்த பகுதிகளில் கொடிக்கம்பம் வைப்பது என்பது கொஞ்சம் சிரமமான செயல். 

சில ஊர்களில் கொடிகளின் உயரம் சொல்லும் அந்த ஊரில் எந்த கட்சி அதிக செல்வாக்கு என்பதை. அதிக செல்வாக்கு உள்ள கட்சிகளின் கொடிகள் உயரமாக இருக்கும். செல்வாக்கு குறைந்த கட்சிகள் உயரமான கொடி நடுவதற்கு கூட பல ஊர்களில் அந்த செல்வாக்கு உள்ள கட்சிகள் சம்மதிக்க மாட்டார்கள். மாநிலத்தில் மிகப்பெரிய செல்வாக்கு கொண்ட கட்சிகளுக்கே சில ஊர்களில் செல்வாக்கு இருக்காது. அப்படியான ஊர்களில் அவர்களது கொடி மரம் பிற கட்சிகளின் கொடி மரத்தை விட உயரம் குறைவாகவே இருக்கும். இன்னும் சில ஊர்களில் கொடி வைக்கும் அளவுக்கு மாநிலத்தின் சக்திவாய்ந்த கட்சிக்கே செல்வாக்கு இருக்காது. அந்த ஊரில் வேறு கட்சிகள் செல்வாக்காக இருக்கும்.

இதன் மூலம் ஒரு ஊரில் உள்ள கட்சி கொடிகளை வைத்து அந்த ஊரில் எந்தெந்த கட்சிகளுக்கு செல்வாக்கு இருக்கு என்பதை ஹைவேயில் பயணிக்கும் போதே கணித்து விட முடியும்.

இப்போது எல்லாம் அப்படி கிடையாது என பொத்தாம் பொதுவாக இதை மறுப்பவர்களும் உண்டு.

பொதுவாகவே தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மாநிலம் முழுவதும் பரந்து வியாபித்து இருக்கும் கட்சிகள். எனவே இந்த கட்சிகளின் கொடிகளை கிட்டத்தட்ட எல்லா ஊர்களிலும் காணலாம்.

பரவலாக தேமுதிக, நாதக, மதிமுக ஆகிய கட்சி கொடிகளும் மாநிலம் முழுவதுமே அதிக இடங்களில் காணலாம்.

இவை தவிர வடக்கு & மேற்கு தமிழக மாவட்டங்களில் பாமக கொடிகளும், வடக்கு மாவட்டங்களிலும் அரிதாக சில தென் மாவட்டங்களிலும் விசிக கொடிகள் காணலாம்.

கொடிகள் இல்லை என்றால் அங்கே அந்த கட்சி இல்லை என்றோ அந்த கட்சிக்கான ஆதரவாளர்கள் இல்லை என்றோ அர்த்தம் அல்ல. அந்த கட்சியை விட அதிக செல்வாக்கு உள்ள கட்சிகள் அங்கே இருப்பதால் இவர்களின் கொடிகள் காணப்படவில்லை என சொல்லலாம்.

கட்சிகள் மாநிலம் முழுவதும் கொடி ஏற்று விழா நடத்துவதை கேள்விப்பட்டு இருப்பீர்கள். எல்லா ஊர்களிலும் "கொடியேற்று விழா" என தனியாக நடத்தி கொடி கம்பம் நடுவதென்பது கிட்டத்தட்ட கட்சி அமைப்பை அந்த ஊரில் நிறுவுவதற்கு சமம். அது சாதாரண கொடி கம்பம் நடும் விழா அல்ல. அதனால் தான் பெரிய தலைவர்களை அழைத்து வந்து விமரிசையாக கொடியேற்று விழா நடத்துகிறார்கள்.
இந்த கட்சி தான் இங்கே எல்லாம் என மக்களுக்கு காட்டுவதற்கும், மக்களுக்கு இந்த கட்சியை அணுகினால் தீர்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கையை விதைப்பதற்கும் இந்த கொடியேற்று விழா உதவுகிறது.

அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆரம்ப கால அரசியல் என்பதே மாநிலம் முழுவதும் "எல்லா ஊர்களுக்கும்" பயணித்து அங்கே கொடி ஏற்று விழா நடத்துவது, கிளைக்கழகங்கள் அமைப்பது ஆகியவை தான். இதன் மூலம் அந்தந்த ஊர் மக்களை நேரடியாக சந்திப்பதற்கும் அவர்களின் வாழ்க்கை முறையை அறிவதற்கும் அவர்களுக்கு அது உதவியாக இருந்தது.

பின்னர் மதிமுக, தேமுதிக, நாதக ஆகிய கட்சிகளும் இவ்வாறு கொடி ஏற்றும் நிகழ்ச்சியை எல்லா ஊர்களிலும் நடத்தின. இப்போது பல ஊர்களில் அவர்களின் கொடிகள் இல்லை என்பது அந்த பகுதியில் அந்த கட்சியின் செல்வாக்கு குறைந்து விட்டது என்பதை பூடகமாக சொல்லும் செய்தி.

கட்சி கொடி மரத்தை அகற்றுவது, வெட்டுவது, வீழ்த்துவது எல்லாம் மிகப்பெரிய விஷயமாக தமிழகத்தில் கருதப்படுகிற ஒன்று. அது கிட்டத்தட்ட கட்சி அமைப்பை அவமானப்படுத்தும் செயலாக பார்க்கப்படும். கட்சி கொடி மர விவகாரங்களுக்காகவே பிரச்சனைகள் நடந்த கதைகள் எல்லாம் முன்பு இருந்தது. 

கட்சி கொடி என்பது அத்தனை சென்சிடிவான விஷயமாகும்.

கட்சிக்கு என்று கிளை கழக செயலாளர், மாவட்ட செயலாளர் என இருந்தாலும் ஒரு கட்சியின் அமைப்பு செயலாளரின் பங்கு தான் கட்சி அமைப்பின் வலுவை தீர்மானிக்கும்.

திறமையான அமைப்பு செயலாளர், செயல்வீரரான மாவட்ட செயலாளர் ஒரு கட்சிக்கு மிக முக்கியம். மாவட்டத்துக்கான பொறுப்பு அமைச்சர் என ஒருவரை நியமிப்பது என்பது அந்த மாநில விஷயங்களை அரசிடம் நேரடியாக கொண்டு சேர்க்க உதவும். ஆனால் மாவட்ட செயலாளரின் பங்கு தான் மாவட்ட அளவில் கட்சியின் அமைப்பை தீர்மானிக்கும். சரியான மாவட்ட செயலாளர் இல்லாத பெரிய கட்சிகள் கூட மற்ற மாவட்டங்களில் மிகப்பெரிய செல்வாக்கு இருந்தும் அந்த மாவட்ட அளவில் சரியாக மக்கள் செல்வாக்கு பெற முடியாமல் போன வரலாறு எல்லாம் உள்ளது. மாவட்ட செயலாளர் அமைவது எல்லாம் கிட்டத்தட்ட வரம் மாதிரி.

இந்த கொடி மரத்தால் இன்னும் பல பயன்கள் கட்சியினருக்கு உள்ளது. 

பல வருஷங்களுக்கு முன்பெல்லாம் பயணத்தில் சிக்கல், வாகன பழுது போன்ற காரணங்களால் பயணம் தடைபட்டால் அந்த ஊரில் நம் கட்சி ஆட்கள் இருக்கார்களா என கவனித்து அவர்களை அணுக கொடி மரங்கள் உதவியது. தெரியாத ஆட்களாக இருந்தாலும் தங்க வைத்து உதவி செய்து அனுப்புவார்கள். "உறுப்பினர் அடையாள அட்டை" எனும் எளிய கார்டின் அவசியம் புரிந்த நாட்கள் அவை. அப்போதெல்லாம் கட்சி உறுப்பினர்கள் குடும்பமாக பரிணமித்து அப்படி தான். 
இது எங்கள் குடும்பத்தில் நடந்த சொந்த அனுபவ அடிப்படையில் சொல்கிறேன். அப்படி ஒரு பயண சிக்கல் தருணத்தில் கோபியில் இருந்து கோவைக்கு வந்து கொண்டு இருந்த என் அப்பா பெருமாநல்லூரில் கொடி மரம் பார்த்து ஊரில் விசாரித்து அணுகிய கட்சி தோழர் அப்பாவுக்கு உதவியதோடு பின் நட்பாகி பல வருஷம் எங்கள் குடும்ப நண்பராகவே இருக்கிறார். இப்படி பலர் கட்சி சார்ந்த நண்பர்களாக எங்களுக்கு உண்டு. கட்சியே குடும்பமாக மாறிய கதைகளில் பாதி தெரியாத ஊரில் அறிமுகம் ஏற்படுத்தி கொடுத்த கொடி மரம் காரணமாகக் கூட இருக்கலாம்.

சோஷியல் மீடியாவில் புனை கதைகள், போட்டோ ஷாப் கார்டுகள் மூலமெல்லாம் கட்சியை வளர்க்க முடியாது, என்பதும் கிளைக்கழக அளவில் மக்களோடு மக்களாக வாழ்ந்து அவர்களின் துயரங்களில் தேவைகளில் தோளுக்கு தோளாக நின்று தான் கட்சியை வளர்க்க முடியும் என்பது தான் இன்றைக்கும் தமிழ்நாட்டின் ஊரகப்பகுதிகளில் உள்ள நிதர்சனம்.

இணைய வழியில் கட்சி நடத்தலாம் என நினைத்து கொண்டு இருப்பவர்களுக்கு இந்த கட்சி அமைப்பின் வேர்களும் அதன் நுணுக்கமான அரசியலும் ஒருபோதும் புரியாது.

தமிழ்நாட்டு வாக்காளர்களை அவர்களின் மனநிலையை கணிக்கிறேன் என கிளம்பி 500 பேரிடம் கேள்வி கேட்டு பதில் வாங்கி அது தான் 6 கோடி மக்களின் மனநிலை என கட்டமைக்க போராடும் நிபுணர்கள், ஒரு நடை தமிழகம் முழுவதும் பயணித்து பார்த்தாலே மாநிலத்தின் மன நிலை என்ன என்பதை யாரிடமும் ஒரு வார்த்தை கூட பேசாமலேயே கணித்து விட முடியும்.

இனி பயணிக்கும் போது கொடி மரங்களை கவனியுங்கள். முடிந்தால் குறிப்பெடுத்து கொள்ளுங்கள். எந்த ஊரில் எந்த கட்சி என கணித்து பாருங்கள். தேர்தல் முடிவுகளின் போது அநேகமாக உங்கள் கணிப்பு சரியாகக் கூட அமையக்கூடும்.

Wednesday, May 28, 2025

இசை இறைவனின் தரிசனம்

சை என்பது திரைப்படங்களை சுவாரசியமாக கொண்டு செல்ல மட்டுமே இருந்த காலங்கள் கடந்து.. இசையால் ஒவ்வொரு மனித மனங்களையும் ஆட்கொள்ள முடியும், ஆற்றுப்படுத்த முடியும்,  என காட்டியவர் இசைஞானி இளையராஜா.

என் வாழ்வின் பல்வேறு தருணங்களில் மனதை துவளாமல் தாங்கிக் கொண்டு மீட்டெடுக்க இளையராஜா அவர்களின் இசையால் முடிந்தது. 

"இளையராஜா இசை மட்டும் இல்லை என்றால்.. என்றோ என்றோ இறந்திருப்பேன்" என்பது என் அனுபவத்தில் மிகையான வாக்கியம் அல்ல. இன்றைக்கும் நான் இருக்கிறேன் என்பதற்கு அந்த இசை கொடுத்த ஆறுதல் மிகப்பெரிய காரணம்.

இளையராஜாவை பார்க்கவேண்டும்.. தூரத்தில் இருந்தாவது தரிசிக்க வேண்டும்.. என்கிற தீரா ஆசை பல்லாயிரம் பேருக்கு இப்போதும் உண்டு. அதில் ஒரு சிறு துளியாய் நானும்.

என்றேனும் அவரை சந்திக்க வேண்டும்.. என்னை பல தருணங்களில் மீட்டெடுத்து கொண்டு வந்து இன்றளவும் உயிர்த்திருக்க வைத்து இருக்கும் இசையை தந்தமைக்காக பாதங்கள் பணிந்து நன்றி சொல்லவேண்டும் என்கிற ஏக்கம் வெகு காலமாக என்னுள் இருந்தது.

சில நாட்கள் முன்பு அதற்கான வாய்ப்பு ஒரு நண்பர் மூலமாக வாய்த்தது.

ஞாயிறு காலை 8 மணிக்கு சென்னையில் இருக்க முடியுமா? என்கிற அவரது கேள்விக்கு "கண்டிப்பாக முடியும்" என்பதை தவிர வேறு என்ன பதில் இருந்துவிட முடியும்?

பரபரவென்று மனம் படபடக்கத் தொடங்கியது. 

நிச்சயமாக அவரை சந்திப்போமா, எத்தனை நேரம் இருப்போம், அவரது வேலைப்பளு இடையே எத்தனை நிமிஷம் நமக்கு ஒதுக்குவார், என்ன பேசுவது, என்னென்ன சொல்வது, எப்படி நடந்து கொள்வது என்பது போன்ற பல விஷயங்கள் மனதுக்குள் ஓடிக்கொண்டும் ஒத்திகைகள் பார்த்துக்கொண்டும் இருந்தன.

முக்கியமான ஒரு கேள்வியை மனைவி கேட்டார். "என்ன பரிசு கொடுப்பது? வெறுங்கை வீசிக் கொண்டு சென்றால் நல்லா இருக்காதே?". நியாயம் தான். 

என்ன வாங்குவது என பெரிய பட்டிமன்றமே நடந்தது. இறுதியில் கேரள மாடல் குத்து விளக்கு (நில விளக்கு) ஒன்று வாங்கி கொடுக்க முடிவு செய்து அதை வாங்கி பேக்கிங் செய்து கொண்டோம்.

அந்த நாளும் வந்தது.

ஞாயிறு காலை சென்னை வந்து அறை எடுத்து ரெடியாகி ஆட்டோ பிடித்து 8:30 கெல்லாம் ஸ்டுடியோ வாசலில் சென்று இறங்கினோம்.
ஆளை விட உயரமான அந்த கதவின் முன் நிற்கையிலேயே மனதில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. 

எத்தனை எத்தனை இசைப் பாடல்களை உருவாக்கிய இடம் அது? எத்தனை எத்தனை ஜாம்பவான்கள் நுழைந்து பார்க்க துடிக்கும் கதவு அது?

உள்ளே நுழையும்போதே செகியூரிட்டி " இடது ஓரமாவே போங்க" என்றார். நடைபாதையின் வலது புறம் அலுவலகம் இருக்க.. நடைபாதையின் இடது புறமாக தயங்கி தயங்கி நடந்தபடி உள்ளே சென்றேன்.

எதேச்சையாக வலது புறம் அலுவலக அறையின் கண்ணாடி கதவு வழி
 பார்க்கயில், உள்ளே தூய வெள்ளுடையில் அமர்ந்திருந்தார் இசை இறைவன். 

பார்த்த கணத்தில் எனது கை தன்னிசசையாக என் நெஞ்சை தொட்டு வழிபாடு
 செய்ததை பின்னர் தான் கவனித்தேன்.. தன்னியல்பாகவே அந்த மரியாதையும் பக்தியும் நமக்குள்ளே நமக்கு தெரியாமலேயே உட்கார்ந்து இருக்கும் போல.

அப்படியே நடந்து நடைபாதை முடிவில் இருந்த சிறிய ஓய்விடத்தில் போடப்பட்டு இருந்த இருக்கைகளில் சென்று அமர்ந்தோம். அவராக அழைப்பார், காத்திருங்கள் என உதவியாளர் சொன்னார்.

சற்று நேரத்தில் "சார்" அழைப்பதாக சொல்லி எங்களை உள்ளே போக சொன்னார்.

ஒரு மாபெரும் திருக்கோவிலுக்குள் முதல் முறையாக நுழையும் பக்தனின் படபடப்போடும் பிரமிப்போடும் உள்ளே நுழைந்தேன்.

வெண்ணிற உடையில் சோஃபாவில் அமர்ந்து இருந்தார் இசை ஞானி. அவரை அத்தனை அருகில் பார்த்ததும் எனக்குள் சொல்ல முடியாத ஒரு பரவசம் படரத் தொடங்கியது.

அவர் அருகில் அழைத்தார்.. சென்றோம்.. என்ன என்பது போல பார்த்தார்.. "நாங்க கோவைல இருந்து வர்றோம்" என்றேன்.. 
கொண்டு வந்து இருந்த குத்து விளக்கு கிஃப்ட்ட நீட்டினேன்..என்ன என்பது போல ஒரு பார்வை பார்த்தார்.. "கேரள நில விளக்கு" என்றேன். எழுந்து நின்று வாங்கி மெல்ல அருகில் இருந்த டீபாய் மேல் வைத்தார்.

எனக்கும் என் மனைவிக்கும் கண்கள் மெல்ல கலங்கி.. பேச நா தழுதழுத்து.. கொஞ்சம் பதட்டம் கூடி.. என ஒரு மாதிரி கலவையான மனநிலையில் இருந்தோம்.. 

சில நொடிகள் நாங்கள் ஆசுவாசப்படுத்தி கொள்ளும் வரை எங்களை பார்த்து கொண்டே இருந்தார்.

சற்று நிதானத்துக்கு வந்தோம்.

சொல்லுங்க என்றார்.. "என் வாழ்வில் பல ஏற்ற இறக்கங்கள்.. நான் துவண்டு போன போதெல்லாம் என்னை மீட்டு கொடுத்தது உங்கள் இசை தான்.. அதற்காக உங்களுக்கு நன்றி சொல்லணும் என வந்தோம்" என்றேன்.. சிரித்தார்..

அப்படி எல்லாம் இல்லை என்பது போல மெல்லியதாக தலையாட்டினார்..

உங்க ஆசீர்வாதம் வேண்டும் என கேட்டு நானும் என் மனைவியும் அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினோம். அன்போடு ஆசீர்வதித்தார்.

பின் போட்டோ எடுத்து கொள்ளலாமா என கேட்டோம்.. சந்தோஷமாக சம்மதித்தார்.

நான் தனியாகவும்.. நானும் மனைவியும் சேர்ந்தும்.. மனைவி தனியாகவும் போட்டோக்கள் எடுத்து கொண்டோம்.
ரொம்ப சந்தோஷம் சார் என்றோம்.. மகிழ்ச்சியோடு வழி அனுப்பி வைத்தார்..

என்னென்னவோ பேச வேண்டும் என மனப்பாடம் செய்து வந்து இருந்தேன். ஆனால் அங்கே அவர் முன்பு எதுவும் பேச வரவே இல்லை. 

சுமார் 10 நிமிடத்துக்கும் குறைவான நேரம் தான் அந்த மொத்த சந்திப்பும் நிகழ்ந்தது. பேசுவதற்காக எங்களுக்கு அதிக நேரமும் கிடைக்கவில்லை. கிடைத்த நேரத்திலும் பிரமிப்பில் நின்றபடி சில நிமிடமும், நெகிழ்ச்சியில் நனைந்தபடி வார்த்தை வராமல் சில நிமிடமும் செலவானது.

அவரது அலுவலகத்தில் அவருக்கு ஒரு அடி தூரத்தில் நிற்கிறோம்.. அவர் நம்மிடம் கேள்வி கேட்கிறார்..நாம் அவருக்கு பதில் சொல்லி கொண்டு இருக்கிறோம்.. அவர் காலில் விழுந்து அவரின் ஆசியை வாங்கிக் கொண்டு இருக்கிறோம்.. என்பதெல்லாம் ஒரு கனவு போல..வேறு எங்கோ வேறு யாருக்கோ நிகழ்வது போல தோன்றி கொண்டே இருந்தது.

வெளியே வந்து மீண்டும் அந்த ஓய்விடத்துக்கு வந்தமர்ந்தோம்.

நடந்ததை நினைத்து நினைத்து பார்த்து கொண்டு இருந்தோம்.. மற்றவர்களுக்கு இது ஒரு சாதாரண நிகழ்வாக தோன்றலாம். ஆனால் எங்களுக்கு இது எத்தனை பெரிய அனுபவம் என்பதை விவரிக்க தெரியவில்லை.

தூர நின்றாவது அவரை பார்த்து விட மாட்டோமா? அவர் நடத்தும் நிகழ்ச்சியில் அவர் வீற்று இருக்கும் மேடை எதிரே மிக தூரத்தில் அமர்ந்தாவது அவரது குரலை நேரடியாக கேட்டு விட மாட்டோமா? அவர் சுவாசிக்கும் அதே காற்றை அதே நேரத்தில் நாமும் சுவாசித்து விட மாட்டோமா? என்றெல்லாம் கால காலமாக ஏங்கி கொண்டு இருந்த எங்களுக்கு.. அவருக்கு அருகாமையில் நின்று அவருடனேயே உரையாடுகிறோம் என்கிற அந்த நினைப்பு எத்தனை பெரிய வரம் என்பது எங்களுக்கு மட்டுமே புரியக்கூடிய ஒன்று.

வாழ்நாள் முழுமைக்குமான அனுபவம். இதை விட வேறு எதுவும் மகிழ்ச்சியோ நெகிழ்ச்சியோ எங்களுக்கு தந்து விடப்போவதில்லை என நினைக்கும் அளவுக்கான அலாதியான அனுபவம் அது.

மனம் ஒரு திருப்தி அடைய தெரியாத ஜந்து என்பது உண்மை தான். 

அவரை கண்டு பேசிய பிறகு அதோடு திருப்தி அடையாமல் அவரது ஸ்டுடியோ முழுக்க பார்க்க வேண்டும்.. அவர் இசை அமைப்பதை தூர நின்று ரசிக்க வேண்டும்..அவரது இசை குழுவினர் இசைப்பது காண வேண்டும் என்றெல்லாம் இன்னும் ஆசைகள் ஒவ்வொன்றாக முளைத்து கொண்டே இருக்கிறது. 

இனி வாழ்நாளில் அவரை மீண்டும் சந்திப்பேனா என்பது தெரியாது. ஆனால் அந்த சில நிமிட சந்திப்பு வாழ்நாள் முழுமைக்கும் போதுமானதாக இருக்கிறது.

இன்றே வாழ்வின் இறுதி என்றாலும் நன்றே என்று நினைக்கும் அளவுக்கு மிக திருப்தியான மனநிலைக்கு அன்று வந்துவிட்டோம். அப்படியான ஒரு உச்ச பட்ச பரவச உணர்வு நிலை அது.

இந்த ஜென்மத்துக்கான மொத்த பிறவிப் பயனும் அந்த பத்து நிமிடங்களுக்குள் அடைந்து விட்டோம்.

அப்படி ஒரு மகானுபவத்தை எங்களுக்கு ஏற்படுத்தி கொடுத்த நண்பருக்கு எவ்வளவு நன்றி கடன் பட்டு இருக்கிறோம் என்பது எங்களுக்கு மட்டுமே புரியும்.

🙏🙏🙏



Sunday, March 16, 2025

தமிழ்நாட்டின் மொழிக் கொள்கை

தமிழ்நாட்டில் இப்போது மிக பரபரப்பாக இருக்கும் விஷயம் மும்மொழியா இருமொழியா என்கிற விவாதம். இப்போது இதை தொடங்கி வைத்தது, புதிய கல்விக் கொள்கையை அமல் செய்யாவிட்டால் தமிழ்நாட்டுக்கு விடுவிக்க வேண்டிய கல்வி நிதி விடுவிக்கப்படாது என்கிற ஒன்றிய அரசின் நிபந்தனையும் அதை தொடர்ந்து இந்த பிரச்சனையை திசை திருப்ப பாஜக அதை மடை மாற்றி, தமிழ்நாடு இந்தியை எதிர்க்கிறது அதனால் தான் புதிய கல்வி கொள்கையை மறுக்கிறது என்கிற பிரச்சாரமும்.
முதலில் தமிழ்நாட்டின் மொழிக் கொள்கை என்ன? எதற்காக இந்தியை எதிர்க்கிறோம் என்பதை பார்ப்போம்.

தமிழ்நாட்டின் மொழிக் கொள்கை:

தமிழ்நாட்டை பொறுத்தவரை இரு மொழிக் கொள்கை அமலில் உள்ளது. 

இங்கே கொள்கை என்பது அரசின் கொள்கை என்பதை கவனத்தில் வைக்கவும். தனியார் பள்ளிகள் அவரவர் விருப்பப்படி பயிற்று மொழிகளை வைத்து கொள்ளலாம். மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாயம். மத்திய பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் CBSE பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை தமிழ் ஒரு பாடமாக இருக்கலாம். 

எனவே அரசின் கொள்கை என்பது அரசு பள்ளிகளுக்கும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளுக்கும் மட்டுமே பொருந்தும்.

இரு மொழி என தமிழ்நாடு முடிவு செய்ய காரணம் சிந்தனையை துண்ட தாய்மொழி மற்றும் உலகோடு இணைந்து செயலாற்ற ஆங்கிலம் என்பது. இவை இரண்டும் மொழிப் பாடங்கள்.

இவை தவிர வாழ்க்கைக்கு அடிப்படை தேவையான அறிவியல், கணிதம், புவியியல், வரலாறு ஆகியவை இதர பாடங்கள்.

அடிப்படை பாடங்கள் 3, மொழிப்பாடங்கள் 2 என்பது தான் தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வி பாட திட்டம்.

மாநில எல்லைப் பகுதிகளில் உள்ள சில பள்ளிகளில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவை கூடுதலாக பயிற்றுவிக்க படுகிறது.

இந்த பாட திட்டத்தில் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்கள் பிறகு அவரவர்க்கு விருப்பமுள்ள மொழிகளை கற்றுக்கொள்ளலாம். 

ஒரு அரசு தன் பிள்ளைகளுக்கு "அடிப்படை கல்வியை" கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்பது அரசியல் சாசன கட்டளை. அதை தமிழ்நாடு சிறப்பாக செய்கிறது. கூடுதல் மொழிகள் அவரவர் விருப்பத்தை பொறுத்தது. சிலருக்கு ஜெர்மன், ஜப்பான், ஃப்ரெஞ்ச், ஸ்பானிஷ் போன்ற அயல்நாட்டு மொழிகள் மீது ஆர்வம் இருக்கும். இன்னும் சிலருக்கு ஹிந்தி சமஸ்கிருதம் போன்ற இந்திய மொழிகள் மீது ஆர்வம் இருக்கும்.

ஒரே வகுப்பில் உள்ள 30 மாணவர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மொழி மீது ஆர்வம் இருக்கலாம். அத்தனையும் ஈடு செய்ய எல்லா பள்ளிகளிலும் எல்லா வகுப்பும் வெவ்வேறு மொழிப் பாட ஆசிரியர்களை நியமிப்பது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாத விஷயம். ஆசிரியர்கள் கிடைப்பதை பொறுத்து அவை மெல்ல மெல்ல சுருங்கி குறிப்பிட்ட ஒரு சில மொழிகள் மட்டுமே கற்றுத் தரும் நிலைக்கு தள்ளப்படும்.

அதைவிட.. மொழியின் தேவை அவசியமாகும் நேரத்தில், உயர்கல்வி, வேலைவாய்ப்பு காரணமாக, அவரவர்க்கு தேவைப்படும் மொழியை அவர்கள் கற்றுக் கொள்வது தான் எதார்த்தமான தீர்வாக இருக்க முடியும்.

வெளிநாடு செல்ல விரும்புவோர் அந்த நாட்டு மொழியையும் அதற்கான தேர்வுகளையும் (TOEFL போன்றவை) அப்போது படித்து கொள்ளலாம். போலவே டெல்லி மும்பை போன்ற நகரங்களுக்கு வேலைக்கு போகிறவர்கள் ஹிந்தி மொழியை கற்கலாம். ஆந்திராவில் வேலைக்கு போகிறவர்கள் தெலுங்கு, பெங்களூருக்கு வேலைக்கு போகிறவர்கள் கன்னடம் என அப்போதைய தேவைகளை பொறுத்து மொழிகளை கற்றுக் கொள்ளலாம்.

எனவே மக்களின் வரிப்பணத்தில் இருந்து பள்ளிகளை நடத்தும் அரசு அடிப்படை கல்வியை மாணவர்களுக்கு கற்று கொடுப்பது தான் கடமை. அதற்கு பின் அந்த அடிப்படை கல்வியை வைத்து மாணவர்கள் அவர்களுக்கு ஆர்வமுள்ள இதர பாடங்களை, மொழிகளை கற்றுக்கொள்வது என்பது தனிப்பட்ட விருப்பம்.

இது தான் தமிழ்நாட்டின் மொழிக் கொள்கையாக இருந்து வருகிறது.

இப்போதைய பிரச்சனை:

காலகாலமாக தமிழ்நாட்டில் அடிப்படை கல்வி கற்று உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உயர்கல்வி வேலைவாய்ப்பு பெற்று பெரிய பதவிகளை பலரும் வகித்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டின் கல்வித் தரம் சிறப்பு வாய்ந்தது என எல்லா ஆய்வுகளும் சொல்லி வருகின்றன. தமிழக மாணவர்கள் மிகப் பரவலாக நல்ல வேலை வாய்ப்பை பெற்று இருப்பதை தினசரி பல செய்திகள் சொல்லிக் கொண்டு இருக்கின்றன.

இச்சூழலில், மத்திய அரசு தனது புதிய கல்வி கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் தமிழ்நாட்டுக்கு கொடுக்கவேண்டிய கல்விக்கான நிதியின் பங்கை விடுவிப்போம் என மத்திய அரசு புதிதாக ஒரு நிபந்தனையை விதித்து இருக்கிறது. 

தமிழ்நாடு, புதிய கல்வி கொள்கையை ஏற்க முடியாது என திட்டவட்டமாக சொல்லி விட்டது. புதிய கல்வி கொள்கையை ஏற்காவிட்டால் நிதியை விடுவிக்க முடியாது என மத்திய அரசும் உறுதியாக இருக்கிறது.

இதன் காரணமாக தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய ரூ. 2,100 கோடி நிதி தமிழ்நாட்டுக்கு கிடைக்கவில்லை. அந்த நிதியை வைத்து தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு செய்ய வேண்டிய மேம்பாட்டு பணிகளை செய்ய முடியவில்லை.

புதிய கல்விக் கொள்கையை எதற்காக தமிழ்நாடு எதிர்க்கிறது?

புதிய கல்வி கொள்கை நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வியை கொண்டு வரும் நோக்கில் உருவாக்கப்பட்டு உள்ளது. அதில் பல நல்ல விஷயங்கள், நவீன காலத்துக்கு ஏற்ப மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கவேண்டிய பாடங்கள் குறித்து எல்லாம் பல நல்ல வழிகாட்டுதல்கள் உள்ளன. அதன் கூடவே, மும்மொழி கொள்கை கட்டாயம், குலத்தொழில்க்கல்வியை நோக்கிய பாட திட்டம் போன்ற பிற்போக்குத்தனமான பரிந்துரைகளும் உள்ளன.

குலத்தொழில்க்கல்வி என்பது அவரவர் குலம் சார்ந்த, இனம் சார்ந்த தொழில்களை பற்றிய முறையான கல்வியை வழங்கும் என சொல்லப்பட்டாலும், இன்றைக்கு தமிழ்நாட்டை பொறுத்தவரை எல்லோருக்கும் எல்லா கல்வியும் கொடுக்கும் நோக்கில் செயல்பட்டு கொண்டு இருக்கும் தமிழ்நாடு அரசு, எல்லா மக்களுக்கும் அவரவர் விரும்பும் கல்வியை கொடுத்து சமூகப் படி நிலைகளில் அவர்களை உயர்த்தி கொண்டு இருக்கிறது. புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் இந்த முற்போக்கான செயல் தடைபடும்.

மும்மொழி கொள்கை என பொதுவாக சொன்னாலும், அதன் நடைமுறை சாத்தியங்களை ஆராய்ந்து பார்த்தால் அது இந்தி மொழியை கற்பிப்பதில் மட்டுமே வந்து நிற்கும்.

இந்திய மொழிகள் எதை வேண்டுமானாலும் கற்கலாம் என புதிய கல்வி கொள்கையில் சொல்லப்பட்டு இருந்தாலும், தமிழ்நாட்டில் உள்ள 37,000+ அரசுப்பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்புக்கும் வெவ்வேறு மொழிப்பாட ஆசிரியர்கள் நியமிப்பதில், ஒரே வகுப்பில் வெவ்வேறு மொழிகளை கற்பிக்க பல்வேறு ஆசிரியர்களை நியமிப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்களையும், அத்தனை ஆசிரியர்கள் கிடைப்பார்களா என்கிற எதார்த்தையும் கவனித்தால் கடைசியில் ஹிந்தி ஆசிரியர்கள் மட்டுமே உள்ளார்கள் அதனால் ஹிந்தி மட்டுமே படியுங்கள் என சொல்லக் கூடிய நிலைக்கு கொண்டு வந்து விடும் அபாயம் உள்ளது.

அடிப்படை கல்வி கற்கும் நேரத்தில், கூடுதலாக ஒரு மொழி, அதுவும் நாம் விருப்பப்படாத ஒரு மொழியை கற்பதில் செலவிடப்படும் நேரம் என்பது மாணவர்களுக்கு அத்தியாவசியமான அடிப்படை கல்வியை முறையாக முழுமையாக கற்க முடியாத நிலைக்கு கொண்டு தள்ளும்.

இதை எல்லாம் கருத்தில் கொண்டு தான் மாணவர்களுக்கு கூடுதல் சுமையை கொடுத்துவிடக் கூடாது என்று தான் தமிழ்நாடு அரசு மும்மொழி கொள்கையை எதிர்க்கிறது.

இனி அடுத்து என்னவாக இருக்கும்?

இந்திய அரசியல் சாசனம் மாநிலங்களுக்கு என்று சில உரிமைகளை தந்து இருக்கிறது. மத்திய அரசு எந்த கொள்கையை சட்டத்தை கொண்டு வந்தாலும் மாநிலங்கள் விரும்பாவிட்டால் அதை அமல் செய்ய முடியாது. மாநிலங்களுக்கு என்றுள்ள தனிப்பட்ட அதிகாரம் அது.

புதிய கல்வி கொள்கையை 2021 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தாலும் இன்று வரை தமிழ்நாடு அதை அனுமதிக்கவில்லை. அப்படி அனுமதிக்காத தமிழ்நாடு மீது மத்திய அரசு நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாது. காரணம் அனுமதிப்பதா வேண்டாமா என தீர்மானிப்பது மாநிலத்தின் உரிமை.

மத்திய அரசு மீண்டும் மீண்டும் கோரிக்கை வைக்கலாம்.. நிதி ஒதுக்க மாட்டேன் என பிடிவாதம் பிடிக்கலாம்.. அதற்கு மேல் எதுவும் செய்ய மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை.

எனவே தமிழ்நாடு அரசு குறிப்பிட்டுள்ள திருத்தங்களை கொண்டு வந்தால் மட்டுமே புதிய கல்வி கொள்கை தமிழ்நாட்டில் அமலாகும் என நினைக்கிறேன். அதில் முக்கியமான திருத்தம் தாய்மொழி மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழி கொள்கை. 

ஒன்று தமிழ்நாட்டில் புதிய கல்வி கொள்கை அமலாகாது

அல்லது மத்திய அரசு தமிழ்நாடு குறிப்பிட்ட திருத்தங்களை கொண்டு வந்து அமல் செய்யும்.

எதுவானாலும் தமிழ்நாட்டு மாணவர்கள் நலனை முன்னிறுத்தியே தமிழ்நாடு அரசு செயல்படும் என நான் திடமாக நம்புகிறேன்.









Wednesday, March 12, 2025

நவோதையா பள்ளிகள் - தமிழ்நாட்டுக்கு தேவையா?

நவோதயா பள்ளிகள் தமிழ்நாட்டுக்கு அவசியமற்றது என்பது எதனால்?

ஜவஹர்லால் நேரு நவோதயா பள்ளிகள் முழுக்க முழுக்க மத்திய அரசால் நடத்தப்படுவது. 

பள்ளிகள் செல்ல பல கிலோமீட்டர் செல்ல வேண்டி இருக்கும் மாநிலங்களில் மாணவர்கள் பள்ளியில் சேராமல் இருப்பது அதிகரித்து வந்ததால்.. அதற்கு தீர்வாக பள்ளியிலேயே தங்கி படிக்கும் வகையிலான உண்டு உறைவிட பள்ளியாக (ஹாஸ்டல் வசதியுடன்) நவோதயா பள்ளிகள் தொடங்கப்படுகிறது.

மாவட்டத்துக்கு ஒரு பள்ளி, அதில் அந்த மாவட்ட மாணவர்கள் மட்டுமே சேர முடியும். 

நவோதயா பள்ளிகள் 6 - 12 ஆம் வகுப்பு வரையே உள்ளன. ஐந்தாம் வகுப்பு வரை அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் தான் நவோதயா பள்ளிகளில் 6 ஆம் வகுப்பில் இருந்து சேர்த்து கொள்ளப் படுவார்கள். அதற்காக ஒரு நுழைவு தேர்வு உள்ளது. அதில் தேர்ச்சி பெற்றால் தான் பள்ளியில் சேர்க்க முடியும்.

9-12 வகுப்பு மாணவர்கள் "வித்யாலயா விகாஸ் நிதியாக" மாதம் ₹600/- செலுத்த வேண்டும்.

அதிகமாக பள்ளிக்கூட வசதி இல்லாத மாநிலங்களில் நவோதயா பள்ளிகள் நல்ல பலனை கொடுக்கின்றன 

ஆனால்...

ஊருக்கு ஊர் துவக்கப் பள்ளிகள், நடுநிலை பள்ளிகள், ஐந்து கிமீ தொலைவுக்குள் மேல்நிலை பள்ளிகள் என எக்கச்சக்கமாக பள்ளிகள் கட்டி வைத்து இருக்கும் தமிழ்நாட்டில் அப்படி உண்டு உறைவிடமாக தங்கி படிக்க வேண்டிய அவசியம் இல்லையே. தினசரி வீட்டில் இருந்து பள்ளிக்கு போய் வர கூடிய எல்லா வசதிகளும் தமிழ்நாட்டில் உள்ளது.

இலவச புத்தகம், இலவச சீருடை, இலவச உணவு, இலவச பஸ் பாஸ், இலவச சைக்கிள், இலவச லேப்டாப் என மாணவர்களுக்கு தேவையான எல்லாவற்றையும் தமிழ்நாடு அரசு கொடுக்கிறது.

அதை விட முக்கியம்.. மாணவர்கள் மாதக் கட்டணம் எதுவும் செலுத்த தேவை இல்லை. கல்வி முற்றிலும் இலவசம்.

மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். மற்ற எல்லாவற்றையும் தமிழ்நாடு அரசு பார்த்துக் கொள்ளும்.

இவ்வளவு வசதிகள் தமிழ்நாடு அரசு கொடுக்கும் போது, மாதக் கட்டணம் செலுத்தி நவோதயா பள்ளிகளில் தங்கி படிக்க வேண்டிய அவசியம் இல்லையே?

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன.

🙏🙏🙏

நவோதையா பள்ளிகள் பற்றி விரிவாக அறிந்து கொள்ள:

https://navodaya.gov.in/nvs/en/Academic/school-administration/facilities-in-jnvs/students/

Monday, February 10, 2025

ஈரோடு கிழக்கு சொல்லும் செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் முடிவுகள் நமக்கு சொல்லும் செய்திகள் பல..

இடைத்தேர்தல் அறிவித்ததும் அதிமுக பாஜக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் மட்டுமல்லாமல் தவெக போன்ற புதிய கட்சிகளும் இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தன..
பொதுவாக இடைத்தேர்தல் என்பது அவரவர் கட்சிக்கு மக்கள் செல்வாக்கு எவ்வளவு இருக்கிறது என்பதை பரிசோதித்து பார்க்கும் களமாக தான் எப்போதும் இருக்கும்.

ஆனால் ஈரோடு இடைத்தேர்தலை புறக்கணிப்பது என்பது பலருக்கு ஆச்சர்யம் தந்தாலும், அந்த புறக்கணிப்புக்கு இரண்டு காரணங்கள் இருப்பதை அரசியல் அறிந்த எல்லோரும் கிட்டத்தட்ட யூகித்து இருந்தார்கள்.

1. திமுக அரசு மீது மக்களுக்கு மதிப்பு குறைந்து உள்ளதா? கூடி உள்ளதா?

2. நாதக கட்சிக்கு மக்களிடம் உள்ள ஆதரவு என்ன?

இந்த இரண்டு கேள்விகளில், திமுக அரசு மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை குறையவே இல்லை என்பது பிரச்சார காலத்திலேயே தெளிவாக தெரிந்து விட்டது.

ஆனால் நாதக கட்சி பற்றிய கேள்வி தான் பலத்த எதிர்பார்ப்புக்குள்ளானது. வேறு எந்த கட்சியும் போட்டியிடாத நிலையில், திமுக மீது அதிருப்தியில் உள்ளவர்கள் நாதகவை ஆதரிக்க வாய்ப்பு உள்ளது.

கூடவே தேர்தலை புறக்கணிப்பதாக சொன்ன கட்சிகளின் ஆதரவாளர்களும் நாதகவை ஆதரிப்பார்கள் என்றும் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.

அதிலும் ஈரோடு பகுதியை பொறுத்தவரை அதிமுக பலமான இயக்கம். பாமக, பாஜக போன்ற கட்சிகளும் கணிசமான மக்கள் செல்வாக்கு பெற்றவையே. இவர்கள் திமுகவை ஆதரிக்க மாட்டார்கள். எனவே அந்த வாக்குகள் எல்லாம் நாதகவுக்கு தான் வரும் என எல்லோரும் எதிர்பார்த்தார்கள்.

ஆனால்,

பதிவான 1.54 லட்சம் வாக்குகளில் 1.15 லட்சம் வாக்குகள் திமுகவுக்கும், 23,810 வாக்குகள் நாதகவுக்கும் கிடைத்து உள்ளது.

நாதக/அதிமுக/பாஜக/பாமக போன்ற கட்சியினர், ஆதரவாளர்கள், திமுக எதிர்ப்பாளர்கள் என எல்லோரும் சேர்ந்தே 23,810 வாக்குகள் தான் என்பது தான் ஆச்சர்யம்.

இவை சொல்லும் செய்திகளில் சில முக்கியமானவை:

1. வலுவான அதிமுக கூட திமுகவை எதிர்த்து வாக்களிக்கவில்லை

2. பாஜகவினர் ஆதரவு கூட நாதகவுக்கு கிடைக்கவில்லை

3. திமுகவை எதிர்ப்பவர்களை விடவும் திமுகவை ஆதரிப்பவர்கள் எண்ணிக்கை அதிகம். இது திமுக அரசின் மீதான நம்பிக்கையை காட்டுகிறது.

4. ஆளும்கட்சி அதிகார துஷ்பிரயோகம் செய்து வென்றது, பணம் கொடுத்து ஓட்டு வாங்கினார்கள் போன்ற கதைகள் எல்லாம் இந்த தேர்தலை பொறுத்தவரை பயன் அளிக்காது. காரணம் அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் கூடவா திமுகவை எதிர்த்து வாக்களிக்காமல் இருக்கும்?

5. போட்டியிட களத்தில் வேறு யாருமே இல்லாத நிலையில், வாக்குகள் பிரியாத சூழ்நிலையில், பிற கட்சிகளின் மறைமுக ஆதரவு இருந்தும் கூட வெறும் 23,810 வாக்குகளை தான் நாதக பெற்றிருக்கிறது என்றால், நாதக பெரிதாக யாருக்கும் நம்பிக்கையான கட்சியாக அமையவில்லை என அர்த்தம்.

6. திமுக எதிர்ப்பாளர்கள் கூட நாதகவுக்கு வாக்களிப்பதை விட திமுகவுக்கு வாக்களிப்பது நல்லது என்கிற முடிவுக்கு வரவேண்டும் என்றால்.. திமுகவின் நல்ல பல மக்கள் நல திட்டங்கள் மக்களை ஈர்த்து இருப்பதாக கொள்ளலாம்

7. மிக முக்கியமாக, தேர்தலுக்கு சில வாரங்கள் முன்பு இருந்து பெரியாரை சிருமைப்படுத்தியும் களங்கப்படுத்தியும் சீமான் பேசி வந்ததை யாரும் ரசிக்கவில்லை என்பதோடு, அதற்கு எதிர்வினை ஆற்றவும் தயாராக இருக்கிறார்கள் என்பதை உணரலாம். நாதகவுக்கு விழுந்து இருக்கக்கூடிய அதிமுக வாக்குகள் கூட அந்த பேச்சால் தான் விழாமல் போயிருக்கும் என நினைக்கிறேன்.
கிட்டத்தட்ட பன்னிரண்டு ஆண்டு காலம் கட்சி நடத்தியும் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியாத நிலையில் ஒரு கட்சி இருப்பது அந்த கட்சி தன்னை தானே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதை காட்டுகிறது.

இனியேனும் மக்கள் நலன் சார்ந்து நாதக சிந்திக்குமேயானால் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அது கைகொடுக்கும்.

மக்களின் மன நிலை என்ன என்பதை அறிவதற்காக தான் அதிமுக பாஜக போன்ற கட்சிகள் தேர்தலில் இருந்து ஒதுங்கி நின்றது என்பது உண்மையானால் இப்போதைக்கு திமுகவுக்கு கிடைத்து இருக்கும் ஆதரவு அவர்களது சட்டமன்ற தேர்தல் கூட்டணி கணக்கை முடிவு செய்து இருக்கும்.

திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தி இருந்திருந்தால் திமுக இத்தனை வாக்குகள் பெற்று இருக்காது. நாதகவும் இவ்வளவு குறைவாக பெற்று இருக்காது.

எனவே மக்களுக்கு திமுக அரசின் மீதான நம்பிக்கை குறையவில்லை என்பதை ஈரோடு தேர்தல் உறுதி பட எடுத்து காட்டி இருக்கிறது.

இதனால் பாஜக தனித்து போட்டியிடும் முடிவை மறுபரிசீலனை செய்து தாங்கள் பயணிக்க அதிமுகவின் தயவை நாடும் என எதிர்பார்க்கலாம்.

நாதக கைவிடப்பட்ட நிலையில் தவெக மாற்று கட்சியாக முன் நிறுத்தப்படலாம்.

எப்படி இருப்பினும் 2026 தேர்தல் களம் மிகுந்த சுவாரசியமாக தான் இருக்கும் என நினைக்கிறேன்.


Printfriendly