Tuesday, March 6, 2018

பெரியார் சிலை ஏன் அவசியம்?

பெரியார் தான் உருவ வழிபாட்டுக்கு எதிரானவராச்சே? அப்புறம் அவருக்கு மட்டும் எதற்கு சிலை? என்றொரு கிண்டலான கேள்விகள் திடீரென முளைத்திருக்கிறது.

மகிழ்ச்சி


பெரியார் உருவ வழிபாட்டுக்கு எதிரானவர் தான். தனிநபர் வழிபாடு கூடாது என்றவர்தான். சிலைகள் வைக்கப்படக்கூடாது என வாதிட்டவர் தான்.

உருவ வழிபாடு என்பது வேறு.. தலைவர்களின் உருவத்தை பெரும் சிலையாக நிறுவி எதிர்வரும் சந்ததியினருக்கு பாடமாக படிப்பினையாக எடுத்துக்காட்டாக வைத்து மரியாதை செய்வது என்பது வேறு

ரஷ்யா அமெரிக்கா இங்கிலாந்து நாடுகளில் பல தலைவர்கள் மன்னர்களின் சிலைகள் அவ்வாறானவையே.

சென்னையில் கூட ஆங்கிலேயர் காலத்தில் அப்படி நிறுவப்பட்ட மன்றோ, ஜார்ஜ் மன்னர் போன்றோரின் சிலைகள் இப்போதும் இருக்கின்றன. அவற்றை பார்க்கும் இளம் தலைமுறையினர் அவர்களை பற்றி அறிய ஆவல் கொண்டு தேடி படிக்க துவங்குகின்றனர்.

எனவே உருவ வழிபாடு தான் தவறே தவிர தலைவர்களுக்கு உருவச்சிலை அமைத்து மரியாதை செய்வதில் தவறில்லை

இது போன்ற தர்க்கங்களை எல்லாம் கலைஞர் அவர்கள் எடுத்து வைத்து பெரியாரையே சம்மதிக்க வைத்து அவரும் மகிழ்ச்சியாக தன் சிலை திறப்புவிழாவிலே கலந்து கொண்டார் என்பது வரலாறு.

எனவே சிலைகளுக்கு எதிரானவர் பெரியார் என்பது தவறான வாதம். சிலைகளை வழிபடுவதற்கு மட்டுமே எதிரானவர் என்பதை புரிந்துகொள்வது நலம்.

நிற்க!

அது வெறும் சிலை தானே? அதை ஏன் நீக்கவேண்டும்? அதை நீக்குவதற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு?

இரண்டுக்குமான பதில் ஒன்று தான்.

பெரியார் சிலையை பார்ப்பவர்கள் அவரைப்பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுவார்கள். அவரது வாழ்க்கை, அவரது சிந்தனை, அவரது போராட்டம், அவர் அப்படி போராட நேர்ந்த சூழல், அப்போதைய காலகட்டத்தின் அடக்குமுறை, சமூக ஏற்ற தாழ்வுகள், அவரது கொள்கைகள், அவரது கருத்து வீச்சுக்கள் என பலவற்றை படித்து புரிந்து கொள்ள முயல்வார்கள்

அதற்காக தான் எல்லா தாலூகாவிலும் அவருக்கு சிலை வைக்கப்பட்டது.

அதனால் தான் அந்த சிலைகளை அகற்றவேண்டும் என சமூகத்தில் பிரிவினையை உருவாக்கி அதன் மூலம் குளிர்காய நினைப்பவர்கள் துடிக்கிறார்கள்

அதன் காரணமாகவே அப்படியான சிலை தகர்ப்புக்கு எதிராக சமூக ஆர்வலர்கள் ஒன்று திரள்கிறார்கள்

இதை படிக்கும் நீங்கள் சமூக ஏற்ற தாழ்வுகளை எதிர்ப்பவர் எனில், எல்லா மனிதனும் சமம் என எண்ணுவோர் எனில், சக மனிதனுக்கான மரியாதை ஒவ்வொருவருக்கும் அவசியம் என நினைப்பவர் எனில், சுயமாக சிந்திக்கும் திறன் உள்ளவர் எனில், நாகரீக மனித சமுதாயத்தில் வாழ விரும்புபவர் எனில், நீங்களும் அந்த சிலை தகர்ப்பை எதிர்த்து இந்நேரம் குரல் கொடுத்து இருப்பீர்கள்.

மாறாக, சமூக ஏற்றத்தாழ்வு படிநிலைகளில் மனிதத்தை வகைப்படுத்தி வைப்பவர் எனில் சிலை தகர்ப்பை நியாயப்படுத்துவீர்கள்

நீங்கள் யார் என்பதை நீங்களே சுயபரிசோதனை செய்துகொள்ளலாம்

நன்றி!

2 comments:

  1. சிறப்பான கருத்துகள். ஏற்ற தாழ்வு வேண்டும் என்பவர்கள் பெரிதும் கள்ள மவுனம் செய்கிறார்கள். உலகில் உள்ள பல நல்ல விஷயங்கள் வேண்டும் ஆனால் இந்த சாதி என்ற அவலத்தை மட்டும் விட மாட்டார்கள். சாதியை வைத்து கட்சி நடத்தும் டாக்டர்களுக்கு புரியவில்லை. அவர்கள் வழி நடத்தும் மக்கள் எப்படி இருப்பார்கள்.

    வெட்கம் இல்லா அரசு , எதுவும் செய்ய தெரியாது உள்ளது. எதாவது கொள்கை என்பது புரிந்தால் தானே செயல் செய்ய முடியும். கொள்ளை கூட்டம் எப்படி மக்களுக்கு உதவ முடியும். கொள்ளை காரி போனாலும் அதே கொள்ளை ஆட்சி நடக்கிறது. சிறிதும் சொரணை இல்லாமல் உள்ளார்கள்.

    ReplyDelete
  2. அருமையான பதிவு

    ReplyDelete

Printfriendly