Wednesday, March 28, 2018

இளையராஜாவும் ஏசு உயிர்த்தெழுதலும்

ஏசு உயிர்த்தெழுந்தது கற்பனையே அறிவியல் பூர்வமான ஆய்வோ ஆதாரமோ இல்லை என இளையராஜா குறிப்பிட்டத்தில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.



எப்படி ராமன், கிருஷ்ணன், முருகன் போன்ற இறை நிலையில் வைத்து பார்க்கப்படும் மனிதர்களின் வாழ்க்கையில் நடந்ததாக சொல்லப்படும் சில சம்பவங்கள் (உதாரணமாக: பேசும் ஜடாயு, பறக்கும் வானரப்படை, சங்கு சக்கரத்தால் சூரியனை மறைய செய்தல் பொன்ற பல நூறு சம்பவங்களை சொல்லலாம்) நம்பமுடியாதவையாகவும் அறிவியல் பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட இயலாததாகவும் இருக்கிறதோ அதைப்போலவே நான் ஏசுவின் வாழ்வில் நடந்ததாக சொல்லப்படும் சம்பவங்களையும் நான் பார்க்கிறேன்.

நபிகள் நாயகம் ஸல் அவர்களது வாழ்க்கை கதையில் கூட இப்படியான சம்பவங்கள் சில உள்ளன. உமறு புலவரே கூட அதை சொல்லி இருக்கிறார்.

புத்தர், மஹாவீரர் என யாரும் இதில் விதிவிலக்கல்ல.

கதைகள் சொல்லப்பட்டபொழுது அந்த கதையின் சுவாரஸ்யத்துக்காக சில மிகைப்படுத்தல்கள் வருவது இயல்புதான்

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், கலைஞர் கருணாநிதி அவர்களது வாழ்க்கை பற்றி சொல்லும்பொழுது கூட சில சம்பவங்கள் இயல்பை மீறி மிகைப்படுத்தலோடு விவரிக்கப்பட்டதை நான் கேட்டுள்ளேன். அது அவர்களது ஆளுமையை அதீத உயரத்துக்கு கொண்டு செல்வதற்கான ஒரு வழிமுறை. அவ்வளவே.

சில நூற்றாண்டுகள் கழித்து 'ஸ்டாலின் சொடக்குப்போட்டால் கவிழ்ந்துவிடக்கூடிய ஆட்சியாக எடப்பாடியின் ஆட்சி நடைபெற்றது' என சொல்லப்பட்டு அதுவும் நம்பப்பட்டு வரலாறாகவே கூட ஆகும் வாய்ப்பு இருக்கிறது

எனவே ஒரு விஷயத்தை பற்றிய அதீதங்கள் இருந்தாலும் கூட அதை நாம் மென்மையாக புறக்கணித்துவிட்டு சொல்லவரும் விஷயங்கள் என்ன என்பதை மட்டும் கவனிப்பது நல்லது.

கீதோபதேசம் நடைபெற்ற சூழல் நடைபெற்ற விதம் அது தூரே இருக்கும் திருதிராஷ்டினனுக்கு சஞ்சயன் வழியாக நேரடி ஒலி/ஒளிபரப்பு செய்யப்பட்டது என்கிற செய்தி ஆகியவை எல்லாம் நம்பத்தக்கது அல்ல.. நம் இளையராஜா அவர்கள் குறிப்பிடுவது போல அறிவியல்பூர்வமானதோ ஆய்வுக்குட்படுத்தப்பட்டதோ அல்ல.. எனினும் கீதையின் மூலம் கிருஷ்ணன் எனும் பாத்திரம் சொல்ல வரும் செய்தி என்ன என்பதில் மட்டுமே நமது கவனம் இருக்கவேண்டும். அது நல்ல கருத்துக்கள் உடையது எனில் அதை நம் வாழ்வில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அவ்வளவு தான் எனது புரிதல்.

அதை விடுத்து அதெப்படி சஞ்செயன் நேரடி ஒளிபரப்பு செய்தார்? இதெல்லாம் என்ன நம்புறமாதிரியா இருக்கு? என எள்ளி நகையாடுவதை விடுத்து அதையும் நம்பும் அளவுக்கு தான் நாம் பலருக்கு கல்வித்தரத்தை கொடுத்திருக்கிறோம் என நினைத்து அதை மேம்படுத்த முனைவதில்லையா? அதைப்போலவே எல்லாவற்றையும் கருத வேண்டும்

இளையராஜா சொன்னதில் தவறு ஒன்றும் இல்லை. எல்லா மத கதைகளிலும் இருப்பது தான் அது. ஆனால் அதை குறிப்பான குற்றச்சாட்டாக வைப்பது சரியல்ல. அப்படி எனில் எல்லா மதத்திலும் இருக்கும் அதுபோன்ற அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத அனைத்து சம்பவங்களையும் அவர் சாடி இருக்கவேண்டும். சாடுவார் என எதிர்பார்க்கிறேன்.

என்னதான் ஆன்மீகத்தில் அமிழ முயன்றாலும் அடிப்படையாகவே அவர் மனதில் கொலுவிருக்கும் அந்த கம்யூனிசமும் பகுத்தறிவும் இன்னமும் உயிர்த்திருப்பதை அறிந்ததில் மகிழ்ச்சி

மெல்ல பகுத்தறிவு பாதைக்கே மீண்டு(ம்) வருவார் என நம்புகிறேன்!

No comments:

Post a Comment

Printfriendly