Friday, October 17, 2014

உச்ச நீதிமன்றம் – தகர்ந்த நம்பிக்கை

இன்றைய தினம் இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே மிக மிக முக்கியமான நாள். இதுகாறும் இருந்துவந்த வரலாற்றை எல்லாம் புரட்டி போட்டு புதிய வரலாறு படைத்த தினம்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கொடுத்து நீதித்துறையின் மீது நம்பிக்கை கொண்டிருந்த சாதாரணனுக்கு கனத்த அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

விஷயத்தை சுருக்கமாக பார்ப்போம்.

1991 – 96 காலகட்டத்தில் முதலமைச்சராக பதவி வகித்தபோது வருமானத்துக்கு அதிகமான முறையில் சொத்துக்கள் சேர்த்து குவித்ததாக தான் வழக்கு. அதற்கான அனைத்து ஆதாரங்களும் ஆவணங்களும் முறையாக தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றை சந்தேகமற நிரூபித்தும் இருக்கிறது தமிழக காவல்துறையின் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு பிரிவு.இந்த வழக்கை எந்த அளவுக்கு தாமதப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு தாமதப்படுத்தி, பொருந்தா காரணங்களை எல்லாம் அடுக்கி, நீதிமன்றத்தை அலைக்கழித்து (சமயங்களில் அலட்சியப்படுத்தி) கடைசியில் உச்ச நீதிமன்றமே தலையிட்டு தனது நேரடி கண்காணிப்பில் இந்த வழக்கை கொண்டுவந்து விரைவு படுத்தியது. நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள் என பலரும் மிரட்டப்பட்டு, சிலர் தானாகவும் இந்த வழக்கிலிருந்து விலகி இருக்கிறார்கள். சாட்சிகள் மிரட்டப்பட்டு பிறழ் சாட்சிகளாக மாற்றப்பட்ட நிகழ்வுகளும் நடந்தது.

நீதித்துறையை இந்த அளவுக்கு கேலிக்கூத்தாக்கிய இந்த வழக்கில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி கர்நாடக சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், நூறு கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது.அந்த தீர்ப்பில் மிக மிக விரிவாக, அவர் செய்த ஊழலின் வீரியம், லஞ்சத்தின் அளவு, முதல்வர் பதவியை பயன்படுத்தி அவர் செய்த அதிகார துஷ்பிரயோகம், நீதித்துறைக்கு அவர் விடுத்த சவால், நீதிமன்றத்தின் மீதான அவரது அலட்சியம் போன்ற அனைத்தையும் மிக விரிவாகவும் ஆதாரப்பூர்வமாகவும் பதிவு செய்திருக்கிறார் நீதிபதி. வயது மற்றும் உடல் நிலையை கருத்தில் கொண்டே எழாண்டு சிறைக்கு பதில் நான்கு ஆண்டுகளாக குறைத்திருப்பதாகவும் தனது கருணையை அதில் பதிவு செய்திருக்கிறார். அந்த கருணையே சட்டப்படி தவறு, முழு தண்டனையும் விதிக்கப்பட்டிருக்கவேண்டும் என்கிற ஒரு கருத்தும் பரவலாக இருக்கிறது.

அந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவும் தள்ளுபடி ஆனது. அப்படி தள்ளுபடி செய்யப்படுவதாக அளித்த தீர்ப்பில், உயர்நீதிமன்ற நீதிபதி, உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய வழிகாட்டுதல் அடிப்படையில், 'ஊழலை மிக கடுமையாக கையாளவேண்டும் என்பதாலும், இந்த வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கையில் (தண்டனை விதிக்கப்பட்ட பிறகும்) அரசு வழக்கறிஞர் பல்டி அடித்திருப்பதாலும் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க முடியாது' என குறிப்பிட்டு இருக்கிறார்.இப்போது உச்ச நீதிமன்றம், இந்த விஷயங்கள் அத்தனையையும் புறக்கணித்து விட்டு, அவருக்கு ஜாமீன் வழங்கி இருக்கிறது.

ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் கருணை காட்டுவது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே டான்சி நில வழக்கில் அவரது குற்றம் தகுந்த ஆவணங்களுடன் நிரூபிக்கப்பட்டிருந்தும், அவர் குற்றவாளி என அறிவித்த உச்ச நீதிமன்றம், அவருக்கு தண்டனை எதுவும் தர விரும்பவில்லை எனவும் அவரே அவருடைய மனசாட்சிக்கு தகுந்த தண்டனையை விதித்துக்கொள்ளலாம் (!) எனவும் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கி நமக்கெல்லாம் விசித்திரமான அதிர்ச்சி அளித்தது நினைவிருக்கும்.இப்போது எனது கேள்வியெல்லாம், 'வயது, உடல்நிலை, வகித்த பதவி, மக்கள் ஆதரவு, அரசியல் பலம் ஆகியவை எல்லாம் ஊழல் செய்யவும், நீதிமன்றத்தை அவமதிக்கவும், தண்டனையிலிருந்து தப்பிக்கவும் போதுமான தகுதிகளா?' என்பது தான். அப்படியெனில் இன்னும் பல பல அரசியல் வாதிகளும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியுமே?.

இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் உச்ச நீதிமன்றத்தின் மீதிருக்கும் நம்பிக்கையே கீழ் கோர்ட்டுக்கள் தவறான முடிவெடுத்தாலும் உச்ச நீதிமன்றத்தில் நீதி நிலைநாட்டப்படும் என்பது தான். இன்றைய தீர்ப்பின் மூலம் உச்ச நீதிமன்றம் அந்த நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக தகத்தெறிந்து இருக்கிறது.யாரும் ஊழல் செய்யலாம், மக்கள் பணத்தை கையாடல் செய்து சொத்துக்கள் சேர்க்கலாம், அதன் மீதான வழக்கை எப்படி வேண்டுமானாலும் இழுத்து அடிக்கலாம், சட்டத்தின் அடிப்படையில் கீழ் கோர்ட்டுக்கள் கொடுக்கும் நியாயமான தண்டனையிலிருந்து உச்ச நீதிமன்றம் சென்று உடல் நிலையை காரணம் காட்டி தப்பித்து கொள்ளலாம், அமைச்சரவைக்கு வெளியிலிருந்து அரசை கட்டுப்படுத்தி ஆட்சி செய்து, இந்திய அரசியல் சாசனத்தையும் அவமான படுத்தலாம் என்பன போன்ற பல பல முறைகேடுகளுக்கு இன்றைய உச்ச நீதிமன்ற தீர்ப்பு வழி வகுத்திருக்கிறது என்பதை நினைக்கும் பொது மிகவும் வருத்தமாக உள்ளது.

இனி, உச்ச நீதிமன்றத்தின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை இல்லாத நிலையை தானாகவே வரவழைத்துக்கொண்டது உச்ச நீதிமன்றம்.

3 comments:

  1. //அந்த கருணையே சட்டப்படி தவறு, முழு தண்டனையும் விதிக்கப்பட்டிருக்கவேண்டும் என்கிற ஒரு கருத்தும் பரவலாக இருக்கிறது.//

    என்கருத்தும் இதே!
    மிக ஆழமாக நீதித்துறை வல்லவற்கு வளையும் போக்கைச் சாடியுள்ளீர்கள்.
    இது தான் நம் நாடுகளின் சாபக்கேடு.
    18 வருடம் அடிச்ச கூத்துக்கு , 10 வருடம் சிறை, முழுச் சொத்தும் பறிமுதல், வாழ்வில் மீண்டும் பொதுவாழ்வில் ஈடுபடாமல் செய்திருக்க வேண்டும். தண்டனைகள் அனைவருக்கும் படிப்பினையாக இருக்கவேண்டும்.
    ஐயா குடும்பத்தையும் கூண்டோடு உள்ளே தள்ளும் நன்நாளையும் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  2. நீதித் துறையை அவமதிக்கவேண்டாம். அப்படியென்றால் குன்காவும் சந்திரசேகராவும் பெரும் குற்றவாளிகள் என்று கூறவும் ஒரு கூட்டம் இருக்கு. மேலே இருக்கும் கோர்ட் கூறும் தீர்ப்பே எப்போதும் முடிவானது. கருணையின் அடிப்படையில்தான் தாயாளுவின் வீட்டிற்குச்சென்று விசாரிக்க கோர்ட் அனுமதி கொடுத்தது. கொலை குற்றம் சுமத்தப்பட்ட சங்கர மட அய்யரே ஜாமீனில் வந்தார். இதில் ஜெ வந்ததில் என்ன தப்பு? சங்கர மட அய்யரை எந்தக் கருணை அடிப்படையில் ஜாமீனில் விட்டார்கள்?

    ReplyDelete

Printfriendly