Thursday, August 2, 2012

இருண்டது இந்தியா


காலப்பெருவெளிப்பயணத்தில் மனிதன் பெட்ரோல், பிளாஸ்டிக், தொலைபேசி, இணையம், மின்சாரம் ஆகியவற்றை சார்ந்து வாழுபவனாக மாறிவிட்டான். இவை இல்லாத நாட்கள் வெறுமையாக உணரப்படுகின்றன.

கடந்த ஜூலை 30ம் தேதிஅதிகாலை 2 மணியளவில் வட இந்தியா முழுமையும் சட்டென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பல மணிநேரமாக மின்வசதி இல்லை. இதன் காரணமாக மருத்துவமனை, வீடு, அலுவலகம், ரயில்வசதி, என எல்லா அத்தியாவசிய வசதிகளும் முடங்கிவிட்டன. சில சுரங்கங்களில் ஊழியர்கள் சிக்கிக்கொண்ட பரிதாபமும் நிகழ்ந்தது. 

கிட்டத்தட்ட 14 மாநிலங்கள் மொத்தமாக மின்வசதியின்றி இருண்டன. சற்று நடவடிக்கை எடுத்து மின் வினியோகம் சீராக துவங்கிய பின் மறுநாள், அதாவது ஜூலை 31ம் தேதி மதியம் ஒரு மணியளவில் மீண்டும் மின்வசதி துண்டித்ததில் 20 மாநிலங்கள் அவஸ்தைக்குள்ளாகின.


(இந்தியாவில் மின் வசதி துண்டிக்கப்பட்ட மாநிலங்கள் - மெரூன் கலர்)

மொத்தமாக வட இந்தியா இருண்டதில் ஆடிப்போன அரசாங்கம் அவசரம் அவசரமாக பூட்டானில் இருந்து கொஞ்சம் மின்சாரத்தை பெற்று டெல்லியிலுள்ள முக்கிய பிரமுகர்கள் பகுதிக்கு மட்டும் மின்வசதி செய்துகொண்டனர்.

வல்லரசாக முயற்சிசெய்துகொண்டிருக்கும் இந்தியாவில் ஏன் இந்த நிலை! 

கொஞ்சம் டெக்னிக்கலான விஷயம் மட்டுமல்ல சுற்றுச்சூழல் சம்மந்தமான விஷயமும் தான் அது!

இந்தியாவில் மின் பகிர்மானம் 

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் பல்வேறு வகையிலும் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மின்சாரத்துக்கு ஆங்கிலத்தில் கரண்ட் என பெயர் வைத்ததில் இருந்தே அது நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு வஸ்து என்பதை உணரலாம். மின்சாரத்தை மொத்தமாக சேமிக்க முடியாது தடுத்து நிறுத்த முடியாது. உற்பத்தியாகும் பகுதியில் இருந்து உபயோகமாகும் பகுதி வரைக்கும் அது பயணித்துக்கொண்டே தான் இருக்கும்.அப்படி உபயோகிக்கப்படாதபோது மாற்றுவழியை அதுவே தேடிக்கொள்ளும். இது தான் அதன் பண்பு.

இந்தியாவில் உற்பத்தியாகும் அனைத்து மின்சாரத்தையும் நாடு முழுதும் கொண்டு செல்வதற்காகவும், மாநிலங்களுக்கு உரிய பங்கை பகிர்ந்துகொடுப்பதற்காகவும் தேசிய அளவில் கிரிட் என சொல்லப்படும் மின் கடத்தும் வழித்தடம் நிறுவப்பட்டு இருக்கிறது. இதை தனியாக Power Grid Corporation of India எனும் அரசு நிறுவனம் நிர்வகித்து வருகிறது. 

இந்த கிரிட்டை வடக்கு, கிழக்கு, வடகிழக்கு, மேற்கு, தெற்கு என ஐந்து பகுதிகளாக பிரித்திருக்கிறார்கள். இதில் இன்னொரு விசேஷம், தெற்கு பகுதி தனியாகவும், இதர நான்கு பகுதிகளை தனியாகவும் இணைத்து இருக்கிறார்கள். இதற்கான காரணம் நாம் பெருமை கொள்ள தக்கது தான்!

தென்னிந்தியாவில் தான் அதிகமான மின் உற்பத்தி நிலையங்கள் இருக்கின்றன. அனல், புனல், அணு, காற்று, மாற்று என எல்லா வகையிலான மின் உற்பத்தியும் இங்கே செய்யப்படுகின்றது. மாநில அரசுகள் தங்களுக்கென்று தனியாக மின் உற்பத்தி நிலையங்களை வைத்திருப்பதால், மாநில அரசு மின் வாரியங்கள் சார்பாக தனியாக சிறப்பான மின் பகிர்மான வழித்தடம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இது தவிர தனியாக தான் தேசிய கிரிட் தென் இந்தியாவில் இருக்கிறது. அதாவது, மாநில வழித்தடத்தில் உபயோகிக்கப்படும் மின்சாரத்தை தவிர சிறு பகுதி தேசிய கிரிட்டில் இணைக்கப்படுகிறது.

ஆனால் மற்ற பகுதிகளில் அப்படி அல்ல! தேசிய கிரிட் தான் வலிமையானது. மாநில மின் வழித்தடம் குறைவானது. இதனால் இதர நான்கு பகுதிகளும் தேசிய கிரிட்டை நம்பி இருக்கையில், தென்பகுதிமட்டும் அந்தந்த மாநில மின்வாரிய நெட்வொர்க்கை நம்பி இருக்கிறது. இது தான் மின் பகிர்மான அமைப்பு!

சுற்று சுழல் காரணிகள் 

புவி வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் பாதிப்பு, வன இழப்பு, நகரமயமாதல், வேதியியல் மாற்றங்கள், இயந்திரமயமாதல், வாகனபெருக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியாவிலும் உலக அளவிலும் பருவநிலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள். இதன் காரணமாக எல்-நினோபோன்ற வானிலை மாற்றங்கள் ஏற்பட்டு வழக்கமாக மழை பொழியும் இடங்களில் மாறுதல் ஏற்பட்டு வருகிறது. பருவநிலை மாற்றங்களால் சீனா, கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் பெருமழையும் இந்தியா போன்ற நாடுகளில் கடும் வெப்பமும் வறட்சியும் இந்த ஆண்டு ஏற்பட்டு இருக்கிறது.

பொதுவாக குளிர்பிரதேசமாக கருதப்பட்ட வட இந்திய மாநிலங்களில் இந்த ஆண்டு அளவுக்கதிகமான வெப்பம் வாட்டி வறுத்து எடுத்ததன் காரணமாக, இயல்பான வெப்பநிலையை கொண்டுவருவதற்காக மிக அதிக அளவில் மின்சாரம் உபயோகிக்கப்பட்டது. உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், ஹரியானா, பஞ்சாப், பீஹார், டெல்லி போன்ற மாநிலங்கள் மிக மிக அதிக அளவில் மின்சாரத்தை உறிஞ்ச ஆரம்பித்ததில், தேசிய கிரிட்டின் மின் தொகுப்பு முழுமையாக வட இந்திய பகுதியை நோக்கி விரைவாக பயணிக்க தொடங்கியது.


நம் வீட்டில் திடீரென்று அதிக மின் அழுத்தம் வந்தால் என்ன ஆகும்? மீட்டர் பாக்ஸ் அருகில் இருக்கும் ஃப்யூஸ் பட்டெனெ டிரிப் ஆகி மின்சாரம் தானாகவே துண்டித்துவிடும். அதுபோலவே, வட இந்திய பகுதியில் அளவுக்கு அதிகமான மின் உறிஞ்சல் இருந்ததால், அந்த பகுதியை நோக்கி மொத்த மின்சாரமும் பயணித்ததால், பினாவில் இருந்து குவாலியர் செல்லும் மின் வழித்தடத்தில், ஆக்ராவுக்கும் பரேலிக்கும் இடையே கிரிட்டில் ட்ரிப் ஆனது. இதன் காரணமாக, மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

ஏற்கனவே நாம் பார்த்தது போல, மின்சாரம் ஓடிக்கொண்டே இருக்கும் வஸ்து என்பதால், மின் துண்டிப்பு ஏற்பட்டவுடன் அது பின்நோக்கி பயணிக்கத்துவங்கி மின் உற்பத்தி நிலையங்களில் சிறு சிறு டிரிப்பாக மாறத்துவங்கியது. இதன் காரணமாக 38 மின் உற்பத்தி நிலையங்களில் உடனடியாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

மொத்தமாக மின் விநியோகம் பாதிக்கப்பட்டதில் கிட்டத்தட்ட 20 மாநிலங்கள் இருளில் மூழ்கின. ரயில் சேவைகள் வட இந்தியா முழுதும் நிறுத்தப்பட்டன. மொத்தமாக இந்தியா ஸ்தம்பித்து விட்டது.

அவசரம் அவசரமாக ட்ரிப் ஆன இடங்கனை கண்டு பிடித்து சரி செய்து 14 மணிநேரங்களுக்குள் மின் விநியோகம் சீரமைக்கப்பட்டு விட்டது. ஆனால் அதற்கு அடுத்த நாளே, ஜூலை 31 மதியம் ஒரு மணி அளவில், ஆக்ராவில் தாஜ்மஹல் அருகில் ட்ரிப் ஆனதில் மீண்டும் வட இந்தியா முழுதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

நடவடிக்கைகள் 

இப்போது நிலைமை சீராக்கப்பட்டு இருக்கிறது, மின்சாரத்தை சிக்கனமாக உபயோகிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது, அதிகமாக மின்சாரத்தை உறிஞ்சும் மாநிலங்களுக்கும் உரிய அறிவுரைகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது.


இப்படியான நிலை வரக்கூடும் என முன்பே அரசு எதிர்பார்த்து தான், வரும் 2017 ம் ஆண்டுக்குள் 76 கிகா வாட்ஸ் கூடுதல் மின் உற்பத்தி செய்யப்படவேண்டும் என திட்டமிட்டு அதற்காக 400 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் திட்டங்களை பிரதமர் அவர்கள் ஆரம்பித்து இருந்தார். எனினும், மிக பழமையான டெக்னாலஜி, அதிக நாட்களான கிரிட், மிக அதிக அளவிலான மின் உபயோகம், அதிகரிக்கப்படாத மின் உற்பத்தி ஆகிய காரணங்களால் இந்த பெரும் இருள் நம்மை சூழ்ந்துகொண்டது.

தென் பகுதியை பொறுத்தவரை, நாம் தேசிய கிரிட்டை நம்பி இல்லை. மாநில மின் விநியோக அமைப்பு சிறப்பாக இருப்பதால் நாம் எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் இயல்பாக இருந்துகொண்டு இருக்கிறோம்.

எனினும், தமிழகத்தின் மின் தேவைக்கு தக்கபடியான மின் உற்பத்தி தற்போது இல்லாததால் நமக்கும் மின்வெட்டு இருந்துகொண்டு தான் இருக்கிறது. இது குறித்த தனியான ‘இருண்ட தமிழகம்’ எனும் பதிவை ஏற்கனவே நீங்கள் படித்திருக்க கூடும்.

பருவ நிலை மாற்றங்களின் பெரு விளைவுகள் பற்றி நாம் இன்னமும் அக்கறையோ கவலையோ கொள்ளவில்லை. சுற்றுசூழல் சிந்தனையே இல்லாமல் உலகை சீரழித்து வருகிறோம். இதை பற்றிய அக்கறை இனியேனும் நமக்கு வேண்டும் என தெளிவு படுத்தும் நிகழ்வாகவே நான் இதை காண்கிறேன்!

நாம் எதிர்கொண்டு நிற்கும் வறட்சி மிக சாதாரணமானது அல்ல, அதன் விளைவுகள் மிக பயங்கரமானவை, அந்த நிலைக்கு நீங்களும், நானும், நாம் எல்லாவரும் ஒரு காரணம் என்பது மட்டும் தான் நம்மை அறைகின்ற உண்மை!

9 comments:

  1. Really super article about power cut in North India... One thing u noticed or not I don't know but Gujarat has been come out crisis.. Because of Modi...

    ReplyDelete
    Replies
    1. Normally I won't reply to comments, but your comment warrants my reply! Gujarat has its own power source like southern states and it is not relying on National Grid. This is not only because of Modi. The previous rulers like Kesubai Patel and others have laid the strong foundation for Electricity and Petrochemical Industries and necessary infrastructure. That could be a worth writing post contents. This my reply is just to clarify the fact! Thank you for your valuable comments! :)

      Delete
  2. அருமையா எழுதி இருக்கீங்க சதீஷ். வாழ்த்துக்கள். இந்த பருவநில மாற்றம், வறட்சி எல்லாம், கூடிய சீக்கிரமே நமக்கு ஆப்பு வைக்க காத்துட்டு இருக்கு. அரசாங்கம் கண்டுக்கற மாதிரி தெரியல... மரம் வளர்ப்போம், மழை நீர் சேமிப்போம்னு ஒரு வரியில சொல்லி முடிசுக்கறாங்க. நல்ல திட்டம் எதுவும் காணோம்.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Nice one Satish, I knew that there was a supply-demand crisis. You have explained it in a wonderful way.
    Sethu

    ReplyDelete
  5. சூப்பர்!
    பகிர்ந்தமைக்கு நன்றி !

    ReplyDelete
  6. கோரிக்கையை ஏற்று எழுதியதற்க்கு நன்றி சதீஷ்..# குரு

    ReplyDelete
  7. அவசியமான அருமையான பதிவு

    ReplyDelete

Printfriendly