Sunday, December 27, 2009

காவிரியை நாம் சரியாக பயன்படுத்துகிறோமா?

"நாடெங்குமே செழிக்க,
நன்மையெல்லாம் பிறக்க,
நடந்தாய் வாழி காவேரி."

இது அகத்தியர் படத்தில் சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் எட்டு திக்கும் பரவிய புகழ் பெற்ற பாடல்..


(ஆர்ப்பரிக்கும் ஒகேனேக்கல் நீர்வீழ்ச்சி)


ஆனால் உண்மையில் நடந்து அல்ல, ஆர்ப்பாட்டமாக தான் நுழைகிறாள் காவேரி நம் அன்னை தமிழகத்துக்குள்.  தருமபுரியில் நுழைந்து மீண்டும் கொஞ்சம் கர்நாடகம் சென்று திரும்ப தமிழகத்துக்குள் நுழைந்து பின் நில்லாத ஓட்டம் தான் கொள்ளிடம் வரை.


ஆனால் வளம் கொழிக்க, வழி சிறக்க வந்த காவிரியை நாம் முறையாக தான் பயன்படுத்தி கொள்கிறோமா?


உபரி நீரோ, மழை நீரோ எதோ ஒன்றை எல்லா வருடமும் கர்நாடகத்தில் இருந்து காவிரி தமிழகத்துக்கு கொண்டு வந்து கொண்டு தான் இருக்கிறது.  அப்படி சில மாதங்களில் மட்டும் கிடைக்கும் சில டி.எம்.சி தண்ணீரை நாம் என்ன செய்கிறோம்??  சேமிக்கும் பழக்கம் நமக்கு இல்லாததால், தண்ணீர் வரும்போது எவ்வளவு உபயோகிக்க முடியுமோ 'அதை மட்டும்' உபயோகித்து மீதத்தை வீணாக கடலில் வீணடித்து வாளாவிருக்கிறோம்.   நீர் வரும் வேளைகளில் அதனை தேக்கி வைத்து பயன்படுத்துவதற்கான எந்த ஏற்பாடும் இதுவரை தமிழகம் எடுக்கவேயில்லை.



(மேட்டூர் நீர்தேக்கத்தின் எழில் வடிவம்)

தமிழகம் வந்து சென்று மீண்டு திரும்பும் இடத்தில் மேட்டூரில் ஸ்டான்லி நீர்த்தேக்கம் கட்டப்பட்டு இருக்கிறது.  இது வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் கட்டப்பட்டது.  அங்கே ஒரு நீர்த்தேக்கம் இருந்தால் தான் (அப்போதைய)ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தின் விவசாய தேவைக்கும் நீர்தேவைக்கும் உதவியாக இருக்கும் என்று அறிந்து கட்டப்பட்டது.  இந்த அணையின் மூலமாக பாசன வசதிக்கும், மின் உற்பத்திக்கும் குடிநீர் தேவைக்கும் நீர் எடுத்துக்கொள்ளப்படுகிறது.  சேலம், ஈரோடு மாவட்டங்கள் இதனால் பயன் அடைகின்றன.


சரி, மேட்டூரில் இருந்து விடப்படும் நீர் நேராக எங்கே செல்கிறது??


(திருச்சியில் முக்கொம்பு அணை)

 மேட்டூரில் இருந்து வெளியேறும் நீர் தங்கு தடை எதுவும் இன்றி நேராக சென்று அடைவது திருச்சி மாவட்டம் முக்கொம்பில் இருக்கும் தடுப்பணைக்கு தான்.  அதுவரை நில்லாமல் ஒரு ஓட்டம் ஓடுகிறாள் காவேரி.

மேட்டூரில் இருந்து முக்கொம்பு வருவதற்குள் ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி என்று நான்கு மாவட்டங்கள் கடக்கிறாள்.  மேலும் பவானி, நொய்யல், அமராவதி என்று மூன்று சகோதரி நதிகளையும் தன்னுடன் இணைத்து கொள்கிறாள்.

நான்கு மாவட்டங்கள் வழியாக பயணிக்கும் காவிரிக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஒரு தடுப்பணையாவது கட்டி தொலைத்து இருந்தால், அந்தந்த மாவட்டங்களின் பாசன, நீர் தேவைகளை ஈடு செய்திருக்க முடியுமே?? ஆனால் அதை செய்யக்கூடிய நிலையை நாம் அடையவே இல்லை!  நமக்கு எப்போதுமே எதிர்கால சிந்தனை என்பதே இல்லை!

ஒவ்வொரு மாவட்டத்திலும் அணைகள் கட்டி, வாய்க்கால்கள் வெட்டி, ஏரி குளங்கள், நீர்தேக்கங்கள் அமைத்து, நீரை அங்கே கொண்டு சென்று சேமித்து வைத்திருப்பது அந்தந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு உபயோகமாக இருந்திருக்கும் என்பதை ஏனோ நாம் யோசித்து பார்ப்பதே இல்லை. 

நீர் வரும் காலங்கள் குறைவு. ஆனால் வருகிற நீர் மிக அதிகம். அதனை கடலில் வீணடிப்பதை விட, அங்கங்கே தேக்கி வைத்தால் என்ன என்கிற கேள்வி ஏனோ இத்தனை ஆண்டுகளில் நமக்கு எழாமலேயே போய்விட்டது.

முக்கொம்பு கடந்தால் அடுத்து காவிரி நிற்பது கல்லணையில்

 

இரண்டாம் நூற்றாண்டில் கரிகாலன் கட்டிய அணை.. எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி அவன் கட்டி வைத்தது இன்று வரை நமக்கு பயன் கொடுத்து கொண்டே இருக்கிறது.  ஆனால் நாம் நம் எதிர்கால சந்ததியினருக்காக, ஏன் நமக்காகவே கூட என்ன செய்ய போகிறோம் என்பது புரிவதே இல்லை!

சோழ பேரரசில் நீர் தேவையின் முக்கியத்துவம் உணரப்பட்டதால் தான் கல்லணையில் இருந்து அங்காங்கே வாய்க்கால்கள் வேட்டி நீர்த்தேக்கங்கள் அமைத்து, அணையில் இருந்து நீரை எங்கெல்லாம், எவ்வளவு எல்லாம், நீரை தேக்கி வைக்க முடியோ அவ்வளவையும் தேக்கி வைத்து, மிச்சம் இருப்பதை, இதற்கு மேல் தேக்க முடியாது என்கிற நிலையில் உள்ள நீரை மட்டுமே கடலுக்கு அனுப்புவது என்று திட்டமிட்டு செயல்பட்டு இருக்கிறார்கள்.  அந்த திட்டமிடல் தான் தஞ்சைவளநாட்டை தரணி புகழ் நெற்களஞ்சியமாக மாற்றி காட்டி பெருமை பேச வைத்து இருக்கிறது.

இதே போல, மேட்டூருக்கும், முக்கொம்புக்கும் இடையிலான பகுதிகளில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு நீர்தேக்கங்கள் அமைத்து வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் நீர் தேக்கங்களை அமைத்து நீரை சேமித்து வைப்பது, அணையில் இருந்து நீர் தேவைகளுக்காக பயன்படுத்தி கொள்வது என்று திட்டமிட்டால், கர்நாடகத்தில் இருந்து கிடைக்கின்ற நீரை முழுமையாக கடலுக்கு வீணடிக்காமல் பயன்படுத்த முடியுமே?? 

கர்நாடகம் நமக்கு கொடுக்க வேண்டிய நீரை வரையறுக்கப்பட்ட அளவுக்கு கொடுக்கவில்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும்.  ஆனால் அப்படி கிடைக்கிற நீரை நாம் முறையாக பயன்படுத்தி கொள்கிறோமா என்றால், இல்லை என்று தான் சொல்ல தோன்றுகிறது!  

கர்நாடகத்துக்கு எதிராக சதிராட முனையும் நமக்கு அதே நேரத்தில் சாதுரியமாக நீர் மேலாண்மையும் செய்ய முனைந்தால், தமிழகத்தின் நீர் இருப்பும் கூடும், தமிழகத்தின் ஜீவாதார நதியான காவிரியின் மூலமான நீர்பாசனம் பெருகும்.

பிற மாநிலங்களோடு முண்டா தட்டுவதற்கும், அதை பேசி தமிழக மக்களை உணர்ச்சிக்கடலில் தள்ளி கொதித்தெழ செய்வதற்கும், உணர்ச்சிப்பிழம்பாக முழங்குவதற்கும், ஆர்பாட்டம் போராட்டம் போன்றவற்றை நடத்தி பரபரப்பு ஏற்படுத்துவதற்கும் இங்கே எத்தனை எத்தனை அரசியலாளர்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே!  அவற்றில் ஒருவரேனும், தமிழக விவசாயிகள் நலனுக்கான நீர்ப்பாசன திட்டங்களை முன்வைத்ததுண்டா??  நீராதாரம் பெருக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்ததுண்டா?? 

நாடெங்குமே செழிக்க பாயும் காவேரியை நாம் தஞ்சைக்கான காவேரி என்று சுருக்கிக்கொண்டோமோ என்று ஐயமாக இருக்கிறது. தமிழகத்தில் எப்போதெல்லாம் திமுக அரசு அமைகிறதோ அப்போதெல்லாம் தஞ்சை தரணியில் மட்டும் தூர்வாரும் பணிகளும் ஏரிகளை பலப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.  அது போதாது.

காவேரி  நாடெங்கிலும் நீர் கொடுக்க தயாராக தான் இருக்கிறாள்.. பயன் படுத்திக்கொள்ள நாம் தயாராக இருக்கிறோமா....அதற்கான திட்டங்களை யாரேனும் முன்னெடுத்து செய்வார்களா??? 

8 comments:

  1. கர்நாடகம் நமக்கு கொடுக்க வேண்டிய நீரை வரையறுக்கப்பட்ட அளவுக்கு கொடுக்கவில்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும். ஆனால் அப்படி கிடைக்கிற நீரை நாம் முறையாக பயன்படுத்தி கொள்கிறோமா என்றால், இல்லை என்று தான் சொல்ல தோன்றுகிறது!
    ...

    சரியா சொன்னீங்அ

    ReplyDelete
  2. ஈரோட்டில் இருந்து வரும் காவேரி ஜேடர்பாளையம் அருகே சிறிய தடுபு அணைபோல் தடுத்து கொஞ்சம் தேக்கி வைக்க படுகிறது

    அங்கிருந்து ராஜவாய்காலுக்கு நீர் பிரித்து அனுப்ப படுகிறது

    ReplyDelete
  3. ரொம்ப சரியான பதிவு.. என்னோட கருத்தும் இதேதான்.. இத பண்றத விட்டுட்டு சிலை திறக்கறன் செங்கல வைக்கிறன்னு சும்மா ஸ்டண்டு பண்ணத்தான் நம்ம லாயக்கு

    ReplyDelete
  4. நன்றி பிரபு,
    ஜோடர்பாளையம் தடுப்பணை எனக்கு புதிய விஷயம். உங்களிடம் இருந்து ஒரு புதிய செய்தியை அறிந்துகொண்டேன். நன்றி!

    ReplyDelete
  5. நன்றி வசந்த்,
    சிலை திறப்பும் தேவை தான்... ஆக்கப்பூர்வமான பணிகளும் தேவை தான்.

    ReplyDelete
  6. அன்பு நண்பர்கேள,

    ஜாதேற்பல்யம் வரும் பொது அப்படியே கொல்லி மலை வாருங்கள் - ஒரு நல்ல அழகான மலை மற்றும் அருவி மற்றும் இயற்கை காடு

    இப்படிக்கு

    மணிமாறன்

    ReplyDelete
  7. Nice Article Satheesh. Good one.

    ReplyDelete

Printfriendly