Saturday, December 26, 2009

ரவிகுமார் நூல்கள் வெளியீட்டு விழா!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொது செயலாளரும், அந்த கட்சியின் ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினருமான திரு ரவி குமார் அவர்களின் நான்கு நூல்களின் வெளியீட்டு விழாவுக்கு சென்று விட்டு இப்போது தான் இல்லம் ஏகினேன்!

எழுத்தாளர், சமூக ஆர்வலர், சிந்தனையாளர், சட்டமன்ற உறுப்பினர், கட்சியின் பொது செயலாளர் என்று பன்முகம் கொண்டவர் ரவிகுமார்.  அவரை நான் பேஸ்புக் மூலம் தான் அறிமுகம் செய்து கொண்டேன்.

விழா நடைபெற்றது தேவநேயப்பாவாணர் நூலக அரங்கம்.  மிதமான குளிரில் அளவான கூட்டம்.  அரங்கம் நுழையும் முன்னேயே தேநீரும் சுவீட்டும் கொடுத்தார்கள்... விற்பனைக்காக பரப்பி வைக்கப்பட்டு இருந்த எண்ணற்ற நூல்களில் நிதானமாக தேடி ஆராய்ந்து மூன்று நூல்கள் வாங்கி கொண்டு அரங்கம் நுழைந்தேன்.

எனது இருக்கைக்கு அருகில் இருந்த நண்பரை பார்க்க வந்த ரவிக்குமாருடன் நான் என்னை அறிமுகம் செய்துகொண்டேன்.  சில பத்திரிக்கைகளிலும், அவரது புரோபைல் படத்திலும் தெரிவதை போல அத்தனை வயதானவர் அல்ல.. மேலும் அந்த படங்களையும், அரசியல் பிரமுகர், சட்டமன்ற உறுப்பினர் என்கிற பின்புலத்தோடு வெள்ளை வேட்டி சட்டையில் அவரை கற்பனை செய்து சென்ற எனக்கு ஜீன்ஸ் & டிசைனர் ஷர்ட்டில் மிக மிக இளமையாக வளைய வந்த ரவிகுமார் ஆச்சரியப்படுத்தினார்.

விழா துவங்கியது.... தமிழ் தாய் வாழ்த்து இல்லாமலேயே!

தலைமை தாங்குவதற்காக திரு தொல்.திருமா வளவனும், முன்னிலை வகிக்க அமைச்சர் தங்கம் தென்னரசுவும் வருகை தந்திருந்தனர்.

நான்கு நூல்கள் எழுதி வெளியிட்டு இருக்கிறார் ரவிக்குமார்.  நான்கும் நான்கு திசைகளில் பயணிக்கிறது. 

கற்றனைத்தூறும் - தமிழக கல்வி நிலை பற்றி;
சூலகம் - பெண்ணிய சிந்தனைகள் அவர்களது பிரச்சனைகள் பற்றி;
பிறவழி பயணங்கள் - கட்டுரைகளின் தொகுப்பு;
அவிழும் சொற்கள் - ஆச்சரியகரமாக அவரது கவிதை தொகுப்பு.

கற்றனைத்தூறும் நூலை அலசி ஆராய்ந்து விமரிசிக்க நாவலாசிரியர் இமையம் வந்திருந்தார்.  பள்ளி கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசுவை முன்னிலையில் வைத்துக்கொண்டே பள்ளி கல்வியின் அத்தனை குறைகளையும் ரவிகுமார் சார்பாக போட்டு கிழி கிழி என்று கிழித்தார்.  அவர் சொன்னவை அனைத்திலும் ஆயிரம் மடங்கு உண்மைகள் பொதிந்திருந்தது... அப்படி கல்வி துறையை விமரிசிக்க அவருக்கு உரிமை இருக்கிறது... அவர் ஆசிரியராக இருந்தவர். (அதை பற்றி தனியாக எழுதவேண்டும்).  இமையம் அவர்களின் நாவல்களில் இருக்கும் தெளிவான நடை, அவரது பேச்சில் இல்லாதது ஒரு குறை.  இத்தனைக்கும் எழுதி வைத்து தான் படித்தார்.. ஆனாலும் அந்த தமிழ் திக்கி திணறி வெளியேறியதை பார்த்தபொழுது அவரது மாணவர்கள் பற்றிய கவலை வந்தது எனக்கு!

சூலகம் நூலை விமரிசித்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழக முன்னாள் துணை வேந்தர் (அழைப்பிதழில் முன்னால் என்று இருந்தது) வசந்தி தேவியின் உரை தெளிவாகவும் அழகாகவும் நோக்கத்தை விட்டு பிசிறாமலும் இருந்தது.  பெண்ணியம் பற்றிய நூல் என்று அட்டையில் போட்டு இருந்தாலும், அதன் கட்டுரைகள் பேசியது பெண்ணியம் மட்டுமே அல்ல, பெண்ணியத்தோடு சார்ந்த சமூக அவலங்களையும் பற்றி விரிவாக பேசுவதை தெளிந்த உதாரணங்களோடு எடுத்து காட்டினார்.

பிறவழி பயணத்தை விமரிசித்த ராமசாமியும், அவிழும் சொற்களை விமரிசித்த கவிஞர் சுகுமாரனும் செம்மையாக பேசினார்கள்... அந்தந்த நூலுக்கான தெளிவான விமரிசனம்.

இப்படியான இலக்கிய உரை கேட்டு எத்தனை நாளாயிற்று?? நன்றி ரவிகுமார் அவர்களே!

இந்த நூல்களை வெளியிட்ட உயிர்மை பத்திப்பகத்தின் மனுஷ்ய புத்திரனை இரண்டாவது முறையாக இங்கே சந்திக்கிறேன்.  ஏற்கனவே சாரு நிவேதிதாவின் பத்து புத்தகங்களை ஒரே விழாவில் ஒட்டுமொத்தமாக வெளியிட்ட விழாவுக்கும் சென்றிருந்தேன்.  உடல் ஊனம் எதற்குமே தடையல்ல என்று நிரூபித்த பெரும் சாதனையாளர் மனுஷ்யபுத்திரன்.  இதோ இப்போது  ரவி குமாரின் நான்கு புத்தகங்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.  நூல்கள் அதிகமாக வெளியிட வெளியிட புது புது எழுத்தாளர்களுக்கான வாய்ப்பும், புது புது கோணங்களிலான எழுத்துக்கும் வாசல் திறந்து வைக்கப்படுகிறது.

அடுத்து வந்தது இன்னொரு ஆச்சரியம்.

சென்னையில் அமைக்கப்பட்டு இருக்கும் செம்மொழி மத்திய ஆராய்ச்சி நிலைய தலைவர் திரு எஸ். மோகன் தனது கருத்துரை நல்கினார்.  அவரிடம் தமிழ் சிக்கி திணறி மூச்சு முட்டிய அழகை காண (கேட்க?) கண் கோடி வேண்டும்!  செம்மொழி ஆராய்ச்சிக்கு இவர் தான் தலைவர் என்று அறியவந்தபோது தமிழ் மீதான பரிதாபம் இன்னமும் கூடியதை ஏனோ தவிர்க்கவே முடியவில்லை.  என்ன அடிப்படையிலே நியமனங்கள் நடைபெறுகின்றன அரசாங்கத்தில் என்கிற கேள்வி இன்னும் ஒரு முறை வந்து போனது மனசுக்குள்!

முன்னிலை வகித்த தங்கம் தென்னரசு, ஒரு அமைச்சராக தன மீதான விமரிசனங்களை பற்றி அங்கே விவாதிக்காமல் தவிர்த்தார்... அது கண்ணியம்...  என்ன விஷயமாக வந்தோமோ அந்த வேலையை மட்டும் செவ்வனே செய்யவேண்டும் என்பதில் அவர் தெளிவாகவே இருந்திருக்கிறார்..  நூலை பற்றிய அவரது கருத்துக்கள், ரவிக்குமாருடனான தனது நட்பு, ரவிக்குமாரின் சமூக சிந்தனைகள், சமூகத்துக்கு அவர் ஆற்றிய பணி, அவரது எழுத்தின் நேர்மை என்று பலவற்றை சிறப்பாக பேசினார்.  தனது பணியை சிறப்பாக செய்தார்.  இப்படியான அரசியல் வாதிகளை காண்பது அரிதாக இருக்கிறது!  பெரும்பாலும் அரசியல் வாதிகள் எந்த விழாவுக்கு போனாலும் வந்தவேலையை விட்டுவிட்டு சொந்த பிரதாபங்களை முழங்குவது தானே வழக்கம்??

அடுத்ததாக வந்தார் திருமா... அவரது பேச்சை முதல் முதலாக இப்போது தான் கேட்கிறேன்!  கணீர் குரல்.  இன்றைய தினத்துக்கு சிறப்பான பேச்சாற்றல் கொண்ட அரசியல் வாதிகளில் குறிப்பிடத்தக்கவர் அவர்.

ரவிக்குமாருடனான தனது உறவு, கட்சிக்காக ரவி செய்த செயல்கள், அவரது பெருமை என்று பலவற்றை பேசினார்... பின்னர் நூல் விஷயங்களுக்கு வந்தார்.   நேரமின்மையால் நான் அதிக நேரம் இருந்து கேட்க முடியாமல் போனது ஒரு பெரும் குறை!

ஜூனியர் விகடனில் ரவிகுமார் எழுதி வரும் தொடர்களை தொடர்ந்து படிப்பவர்களுக்கு ஒரு விஷயம் தெளிவாக புரியும்..  அவர் எங்கேயும் எப்போதும் தனது கட்சி சாயத்தையோ, அரசியல் நிலைப்பாட்டையோ, கட்சியின் கொள்கையையோ எழுத்தில் வடித்து வைக்க மாட்டார்...  எதை பற்றி எழுதுகிறாரோ, அதனை நடுநிலையோடு தீக்கமாக உறுதியாக குறிப்பாக நேர்மையாக எழுதுவார்.    இப்படி எழுதுவதற்கு அவரது தனிப்பட்ட திறம் ஒரு புறம் என்றாலும், கட்சியும் கட்சியின் தலைமையும் அதற்கு ஒத்துழைப்பு தராமல் அது சாத்தியமல்ல.. அந்த வகையில் திருமா பாராட்டாப்படவேண்டியவர்.  வேறு யாரேனும் ஆயின், "நம்ம கூட்டணியில் இருக்கோம், அப்படி இருந்திட்டே திமுக அரசை விமரிசிக்கிறானே" என்று ரவி மீது மாறுபட்ட கருத்தை கொள்வதற்கோ, அவரது எழுத்துக்களை கொஞ்சம் அடக்கி வாசிக்கவோ வைத்திருப்பார்கள்.  கட்சி வேறு, கட்சி உறுப்பினரின் சொந்த கருத்து வேறு என்கிற தீர்க்கம் திருமாவுக்கு இருப்பது சந்தோஷமாக இருக்கிறது...

இதே போல எல்லா கட்சி தலைமைக்கும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்கிற ஏக்கமும் வந்து தொலைக்கிறது!

1 comment:

  1. ரவிக்குமாரின் சமீபத்திய கட்டுரைகளில் திமுக அரசைப் பற்றிய விமர்சனங்களை எங்கே பார்த்தீர்கள் நண்பரே ? விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திமுகவால் இத்தனை அவமானப்பட்டும், இன்னும் கூட்டணியோடு ஒட்டிக் கொண்டிருப்பதற்கு ரவிக்குமார்தான் காரணம். ரவிக்குமாருக்கு கருணாநிதியோடு ஏற்பட்டிருக்கும் நெருங்கிய நட்பால், தங்களின் எல்லா கொள்கைகளையும் காற்றில் பறக்கவிட்டு விட்டு, திமுகவின் தலித் பிரிவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மாறி விட்டது என்பதுதான் உண்மை.

    ReplyDelete

Printfriendly